மக்கள் சக்தியால் அதிமுக, திமுகவை வீழ்த்துவோம்: மதுரை மாநாட்டில் சபதமிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்கள்
மதுரை: சட்டசபை தேர்தலில் மக்கள் சக்தியால் அதிமுக, திமுகவை வீழ்த்துவோம் என மதுரையில் நடைபெற்ற மக்கள் நல கூட்டணி மாநாட்டில், கூட்டணி கட்சித் தலைவர்கள் சபதமிட்டுள்ளனர்.
திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற முழக்கத்துடன் சட்டசபை தேர்தலில் களமிறங்கியுள்ளது மக்கள் நலக்கூட்டணி. மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் நல கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. மக்களை சந்திக்கும் வகையில் மதுரையில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடத்தி தங்களின் செயல்பாடுகளை கட்சித் தொண்டர்களுக்கு விளக்கினர்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தமிழக செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந் திய கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, தமிழ் மாநில செயலர் ஆர்.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல். திருமாவளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இக்கட்சிகளைச் சேர்ந்த திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெற்றிக்கூட்டணி
முன்னதாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அனைவரும் மேடையில் ஒன்றாக கையை உயர்த்தி வெற்றிக்கூட்டணி என்று கோஷமிட்டனர். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் விபத்தில் உயிரிழக்கவே, மாநாடு தொடங்குவதற்கு முன்பு, பாக்கியராஜின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நலக்கூட்டணி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பேசினர்.

முதலாளிகளின் அரசு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசும்போது, நமது நாடு மதசார்பற்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட நாடு. சமூக நீதியை ஏற்றுக்கொண்ட நாடு. நமது நாடு சமத்துவ நாடாக மாற வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதை நிறைவேற்றும் தகுதி மக்கள் நலக்கூட்டணிக்கு தான் உள்ளது. பா.ஜ.க. அரசு பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளுக்காக செயல்படும் அரசாக உள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களில் ஊழல்
பா.ஜ.க. ஆட்சியில் மதவெறி, சாதி வெறி தாண்டவம் ஆடுகிறது. சாதி வெறி தான் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோத் கொலைக்கு காரணமாகும். மதுரை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நியாயத்துக்காக போராடிய தலித் மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு துணைவேந்தர் பணியிடங்களும் 8 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது. அவ்வாறு பணம் கொடுத்து துணைவேந்தராக பணியில் சேருபவர்கள் விரிவுரையாளர், பேராசிரியர் பணியிடங்களுக்கு பெரிய அளவில் பணம் பெறுகின்றனர். ஊழல் நிறைந்த மையங்களாக பல்கலைக்கழகங்கள் மாறி விட்டன.

வீழ்ச்சியடைந்த கல்வித்தரம்
தமிழகத்தில் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து விட்டது. கல்விக்கூடங்களில் ஊழல் அதிகரித்தது தான் இதற்கு காரணமாகும். சமீபத்தில் பெய்த கனமழையால் தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. அரசு 2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகையையே கொடுத்துள்ளது.
அதுவும், தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மட்டுமே பா.ஜ.க. அரசு கொடுத்துள்ளது என்று கூறினார் ராஜா.

மக்களை காப்பாற்ற பாடுபடுவோம்
மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க அ.தி.மு.க. அரசுக்கு தைரியம் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் அரசியல் பிழையை செய்த கட்சிகளாகி விட்டன. இந்த கட்சிகளை தண்டிக்க மக்கள் தயாராகி விட்டனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற, தமிழக மக்களை காப்பாற்ற, தமிழக மக்களின் உரிமையை பாதுகாக்க மக்கள் நலக்கூட்டணி பாடுபடும் என்றும் கேட்டுக்கொண்டார் ராஜா.

திமுக - அதிமுக
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் பேசும் போது, மக்கள் நல கூட்டணி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாட்டை தமிழக மக்கள் கண்டிப்பாக அங்கீ கரிப்பார்கள். தமிழக மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தவமிருந்து பெற்ற குழந்தை தான் மக்கள் நல கூட்டணி. அதிமுக திமுக ஆகியன கொள் கைகள் அனைத்தையும் கைவிட்டு, தமிழக அரசியலை வியாபார மாக்கிவிட்டன. இந்த இரு கட்சி களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் கருணாநிதி வயதில் மூத்தவர், ஜெயலலிதா அவரை விட வயது குறைந்தவர். இந்த வித்தியாசங்களை தவிர வேறு எந்த வித்தியாசங்களும் இந்த கட்சிகளிடம் இல்லை என்று ஒரே போடாக போட்டார்.

மாற்று ஆட்சி
இந்த இரு கட்சிகளும் இல்லாத மாற்று ஆட்சி வர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. இந்த தேர்தலில் ஒரு கோடி இளை ஞர்கள், இளம்பெண்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களுடைய விருப்பம் தமிழகத்தின் ஆட்சி மாற்றம். அந்த விருப்பம், மக்கள் நலக்கூட்டணி மூலம் நடக்கும் என்றார் முத்தரசன்.

வீழ்த்துவோம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, எங்களை சந்திக் கும் நபர்களெல்லாம் உங்க ளால் அதிமுக, திமுகவை வீழ்த்த முடியுமா? அதற்கான பலமிருக் கிறதா என்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி இருந்தபோது இதுபோன்ற கேள்விதான் எழுந்தது. மக்கள் எழுச்சியால் நாட்டைவிட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளி யேறினர். அதுபோன்று தற்போது திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்தும் மக்கள் சக்தி மக்கள் நல கூட்டணிக்கு உள்ளது என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

கனிமவளக்கொள்ளைகள்
கிரானைட் கொள்ளையால் மதுரையில் மட்டும் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று விசாரணை மேற்கொண்ட சகாயம் சொல்கிறார். தாது மணல் கொள்ளையை கணக்கிட்டுப் பார்த்தால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்புகள், ஊழல்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க தமிழகத்தில் இருந்து திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று கூறினார் ஜி. ராமகிருஷ்ணன்.
சபதமெல்லாம் சரிதான்... இதே வேகம் திமுக, அதிமுகவை வீழ்த்துவதிலும் இருக்கவேண்டும் என்கின்றனர் நான்கு கட்சியின் தொண்டர்களும்.












Click it and Unblock the Notifications