ஆர்.கே. நகரில் போட்டியிடப் போவது தினகரன்?.. 15ம் தேதி கூடுகிறது அதிமுக ஆட்சி மன்றக்குழு
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவது யார் என்பதை முடிவு செய்ய 15ம் தேதி அதிமுக ஆட்சி மன்றக்குழு கூடுகிறது.
சென்னை: ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வரும் 15ம் தேதி அதிமுக ஆட்சிமன்றக்குழு கூடுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலமின்றி கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவர் மறைந்ததையடுத்து, அவர் வென்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அடுத்த மாதம் 12ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தைவிதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

அதிமுக வேட்பாளர் யார்?
அதிமுகவைப் பொருத்தவரை ஆர்.கே.நகர் மிக முக்கியமான தொகுதி. கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வென்ற இடம். அதனால் அந்த இடத்திற்கு மீண்டும் யாரை நிறுக்க வைப்பது என்று அதிமுக சார்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தினகரன் போட்டியா..
ஜெயலலிதா மறைந்த உடன் சசிகலாதான் ஆர்.கே. நகரில் போட்டியிடுவார் என்ற நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றுவிட்டார். அதற்கு அடுத்த இடத்தில் துணைப் பொதுச் செயலாளராக உள்ள தினகரன் போட்டியிடுவாரா என்ற கேள்வி தினகரனிடமே வைக்கப்பட்டது. அதற்கு ஆட்சிமன்றக்குழு கூடி முடிவு செய்யும் என்று பதில் அளித்தார்.

ஆட்சி மன்றக்குழுக் கூட்டம்
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்ற டிடிவி தினகரன் வரும் 15ம் தேதி அதிமுகவின் ஆட்சிமன்றம் கூட உள்ளது என்று அறிவித்துள்ளார். அப்போது ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்தும் வேட்பாளர் யார் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்ப்பார்ப்பு
வரும் 15ம் தேதி அதிமுக ஆட்சி மன்றக் குழு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க உள்ள நிலையில், அதிமுகவின் வேட்பாளர் யாராக இருப்பார் என்று அதிமுகவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போன்றே தமிழக மக்களும் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications