மற்ற தேர்தல்களைவிட ஆர்.கே.நகர் தேர்தல் நேர்மையாகவே நடந்தது...சந்தீப் சக்சேனா விளக்கம்..
சென்னை : மற்ற தேர்தல்களை விட ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நேர்மையாக நடந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி விபரம்..
மற்ற தேர்தல்களைவிட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் மக்கள் பார்வைக்காக வைப்பதற்காக இ-நேத்ரா போன்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால், சில கட்சிகள் பல்வேறு புகார்களைக் கூறின. பொதுவாழ்க்கையில் உள்ள அந்தக்கட்சியினர், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை வைக்கும்போது ஆதாரங்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனிடம் வந்த புகார்களுக்கு பதிலளித்து இருக்கிறோம். அதை இணையதளத்தில் பார்க்கலாம். ஓட்டு எண்ணிக்கையில் இருந்து சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் ஏற்கனவே கூறிய புகார்கள் அனைத்துக்கும் பதில் அளித்திருக்கிறோம்.
இவ்வாறு சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறினார்.