"அம்மா 6 வதுமுறை மட்டுமல்ல... 60வது முறையாகவும் முதல்வராவார்"... அப்படிப் போடு சபாசு!
சென்னை: "உலகத்தில் உள்ள எல்லா மூலிகைகளையும் நஞ்சாக்கித்தந்தாலும் எங்கள் புரட்சித்தலைவி அம்மாவை சாய்க்க முடியாது... அம்மாவின் ஆட்சி 6 வதுமுறையாகவும் 60 வது முறையாகவும் அமையும்..." ( குடுக்குற காசுக்கு மேல கூவுறது இதானோ) இது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நாஞ்சில் சம்பத்தின் ஹைலைட் பிரச்சாரம்.
அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகரில் வலம் வருகின்றனர். காலையிலும் மாலையிலும் அமைச்சர்கள் முற்றுகை என்றால் இரவில் நட்சத்திர பேச்சாளர்களின் முற்றுகை என திக்குமுக்காடிப்போயிருக்கின்றனர் ஆர்.கே.நகர்வாசிகள்.
வீதிக்கு வீதி தேர்தல் பணிமனைகள்... வார்டுக்கு ஒரு அமைச்சர் என களமிறங்கி வீடு வீடாக பிராச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதிமுகவினர். இவர்களின் அதிரடி முற்றுகைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்கவேண்டும், கின்னஸ் சாதனை பெற வைக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு! வீதி வீதியாக வலம் வருகின்றனர் அமைச்சர்கள்.

ஆரத்தி எடுத்து வரவேற்பு
இந்திரா காந்தி நகர் 4-வது, 5-வது தெருக்களில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜு ஆகியோர் ஓட்டு வேட்டையில் இறங்கினர். தொண்டர்களுடன் தொண்டராக கலந்த முன்னாள் முதல்வர் வீடு வீடாக சென்று அம்மாவிற்கு ஆதரவு தரவேண்டும் என்று வாக்காளர்களின் கைகளைப் பிடித்து கேட்டுக்கொண்டார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜுக்கு முஸ்லிம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களும் இணைந்து வாக்கு சேகரித்தனர்.

வேலுமணி அட்டாக்
சுழல் விளக்கு சுழல ஏசி காரில் வந்தவர்கள் அனைவரும் ஆர்.கே.நகரில் வெயில், புழுது என்று பாராமல் சுற்றி வருவது தொகுதிவாசிகளுக்கு சற்றே ஆச்சரியத்தைத்தான் தருகிறது. கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வீடு விடாக சென்று வாக்குகள் சேகரிப்பது தனி பாணிதான். அவர் கையில் எடுத்திருப்பது அம்மா உணவகம்.

பசிப்பிணி போக்கியவர்
விலையில்லா நலத்திட்டங்களை அள்ளி வழங்கியும், இந்தியா மட்டுமின்றி உலகமே போற்றும் முன்னோடி திட்டமான, ஏழை, எளிய மக்களும் வயிறார உண்ண மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மலிவு விலை அம்மா உணவகங்களை திறந்து வைத்து, மக்களின் பசிபிணியை போக்கியவர் முதல்வர் அம்மாதான் என்று கூறி வாக்கு சேகரிக்கிறார்.

கோகுல இந்திரா
அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா சொக்கலிங்க கிராமணி காலனி பகுதியில் முற்றுகையிட்டார். கையில் அதிமுக கொடி, மகளிர் அணி புடை சூழ அவர் வாக்கும் சேகரிக்கும் பாணியே தனிதான். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது என்று ஆரம்பித்தார். அம்மா ஆட்சியில் தமிழகம் கல்வி வளர்ச்சியில் முதலிடம் வகிக்கின்றது என்றும் ஒரே போடாக போட்டார் கோகுல இந்திரா.

நாஞ்சில் சம்பத்
40-வது வார்டு பாகம் எண்.66, 67-ல் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அவரது பேச்சுதான் ஹைலைட். சம்பத் பேச பேச கூட்டத்தினர் மட்டுமல்ல அமைச்சர்களும் அப்படியே அசந்துதான் போனார்கள். எனவேதான் அனைவரின் பிரச்சாரத்தையும் பெரிது படுத்தாத ஜெயாடிவியில் நாஞ்சில் சம்பத்தின் பிரச்சாரம் மட்டும் அடிக்கடி ஒளிபரப்பாகிறது.

நட்சத்திர பட்டாளங்கள்
நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகை விந்தியா என நட்சத்திர பட்டாளங்களும் தங்களின் பங்கிற்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பிரியாணி பார்சல்
பிரச்சாரம் ஒருபுறம் இருக்கட்டும், சுடச்சுட பிரியாணி ஒரு புறம், கறிவிருந்து மறுபுறம் என தேர்தல் பணிமனை பக்கம் தனி கவனிப்பு நடக்கிறதாம் வாக்காளர்களுக்கு. கூட்டத்தோடு கூட்டமாய் போய் சிறப்பு கவனிப்பு செய்யவும் தவறுவதில்லையாம் அதிமுகவினர்.

களத்தில் எதிரிகளை காணோமே
இப்படி எல்லாம் நடக்கும்னு எங்களுக்கு அப்பவே தெரியும் என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டனர் திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள். ஆனால் தைரியமாக களமிறங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளோ பணிமனை திறக்க கூட முடியாமல் பாவம் கால்நடையாகப் போய் 'ஊருக்கு ரெண்டு கட...பேருக்கு ரேஷன் கட... கேட்ட பொருள் கிடைக்காது...கேவலப்பட்ட கட...அக்கம்பக்கம் பார்த்து நட....கண் சிமிட்டிக் கூப்பிடுது...சர்க்காரு மதுபானக் கட' எனப் பாடிக்கொண்டும் தப்பாட்டம் ஆடியும் வாக்கு சேகரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications