ஜெயலலிதா துரோகி என்று விரட்டிய டிடிவி தினகரன்! கடந்து வந்த பாதை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசி அணி அதிமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்.
சென்னை: ஜெயலலிதாவின் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு விரட்டப்பட்ட டிடிவி தினகரனை ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக ஆட்சிமன்றக்குழு. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை வழிநடத்த சசிகலாவின் அக்காள் மகன் என்ற தகுதி தவிர வேறு என்ன தகுதிகள் இவருக்கு இருக்கிறது என்று அதிமுகவின் உண்மை தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிடிவி தினகரன் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்.
கடந்த காலங்களில் டி.டி.வி. என அ.தி.மு.கவினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன். இவருக்கு பாஸ்கரன், சுதாகரன் ஆகிய இரண்டு தம்பிகள் உள்ளனர்.
சசிகலா போயஸ்தோட்டத்திற்குள் வந்த பின்னர் டிடிவி தினகரன் போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். தினகரனின் தம்பி சுதாகரனைத்தான் வளர்ப்பு மகனாக தத்து எடுத்து திருமணம் செய்து வைத்தார் ஜெயலலிதா இதுவே அவரது அஸ்தமனத்திற்கு அச்சாரமாக அமைந்தது.
டிடிவி தினகரன்
பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என மாறினார். மாமன் மகள் அனுராதாவை, ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரது மனைவி அனுராதா ஜெயாடிவியை நிர்வாகம் செய்தார்.
அதிமுக பொருளாளர்
தேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பாளராக போயஸ்தோட்டத்திற்குள் நுழைந்தார். செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். அதிமுகவின் மிக முக்கிய பதவியான பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது.
டெல்லியில் தினகரன்
1999ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவினார், இதனையடுத்து ராஜ்யசபா எம்.பியாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பெரியகுளம் மக்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டார்.
துரோகி முத்திரை
2011ல் கட்சியில் இருந்து சசிகலா உறவினர்கள் அத்தனை பேரையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியபோது தினகரனும் தப்பவில்லை. அதன்பின் அரசியலில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை போயஸ்கார்டன் பக்கம்கூட அவர் வரவில்லை.
ஃபெரா வழக்கு
1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம்
கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா அப்போது மீண்டும் நேரடி அரசியலுக்கு வந்தார் டிடிவி தினகரன். ஆட்சி அமைக்க ஆளுநரை சசிகலா சந்தித்தபோதும், பின் எடப்பாடி பழனிச்சாமி சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும் அவர்களுடன் டிடிவி தினகரன்தான் அருகில் நின்று கொண்டிருந்தார்.
துணை பொதுச்செயலாளர் பதவி
ஜெயலலிதாவினால் விரட்டப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா சிறைக்கு செல்லும் முன்பாக கட்சியில் அடிப்படை உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில், அவர் துணை பொதுச் செயலளராக அறிவிக்கப்பட்டார்.
ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர்
கட்சியை தனது கட்டுப்பாட்டியில் வைத்துள்ள டிடிவி தினகரன், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதற்காகவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகிறார். வெற்றி பெறும் பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமியை இறக்கிவிட்டு முதல்வராக முயன்றாலும் ஆச்சரியமில்லை. ஆனால் அவர் மீது உள்ள வழக்குகள் அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைக்குமா என்பதே அனைவரின் முன் எழும் கேள்வி.
ஜெயிக்க வைப்பார்களா?
50000 வாக்குகளுக்கு மேல் வாங்கி வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு பேசினாலும் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனை ஜெயிக்க வைப்பார்களா? அவர் சட்டசபைக்குள் எம்எல்ஏவாக நுழைய முடியுமா? வாக்காளர்கள் கையில்தான் உள்ளது.