தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நிலவும் போட்டி: பீட்டர் அல்போன்ஸ்க்கு வாய்ப்பு?
தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஞானதேசிகன் பதவியேற்று வரும் அக்டோபர் மாதத்துடன் 3 ஆண்டுகாலம் நிறைவடையப்போகிறது. இதைத் தொடர்ந்து புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.
2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவோம் என்று தமிழ்நாடு- புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.
தேர்தல் கூட்டணி
தமிழ்நாடு காங்கிரஸ் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே தனித்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர்கள் எதிர்பார்த்த அளவு வாக்குகளைப் பெறவில்லை. தேர்தலின்போது கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் இணைந்து செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.
கோஷ்டிகள் பலவிதம்
தமிழ்நாடு காங்கிரசில் பலகோஷ்டிகள் உள்ளன. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், ஹெச்.வசந்தகுமார், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசு என பல தலைவர்கள் தங்களுக்கு என ஆதரவாளர்களை கொண்டுள்ளனர்.
ஒற்றுமையா இருக்கோம்
கோஷ்டித்தலைவர்கள் அணைவரும் ஒருங்கிணைத்து செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறி வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்
தற்போது சட்டசபை தேர்தலுக்கு தமிழ்நாடு காங்கிரசை பலப்படுத்தப்போவதாக முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். இதுகுறித்து நிர்வாகிகளிடம் கலந்து பேசியதாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
3 ஆண்டுகள் பதவி
ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று வருகிற அக்டோபர் மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. எனவே அக்டோபர் மாதத்துக்குள் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக வருபவர் அனைவரையும் அனுசரித்து செல்பவராக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.
அடுத்த தலைவர்
எனவே சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரில் ஒருவரை புதிய தலைவராக நியமிப்பது குறித்து கட்சி மேலிடம் பரிசீலனை செய்து வருகிறது.
பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ் 40 வருடங்களாக தமிழ்நாடு காங்கிரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். 10 ஆண்டுகள் மாவட்ட தலைவராகவும், 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை டெல்லி மேல்சபை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். சிறந்த பேச்சாளர், எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த பதில் கொடுக்கும் ஆற்றல் உள்ளவர். எனவே இவர் புதிய தலைவராக வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருநாவுக்கரசர்
அதேசமயம், நிதானமானவர், மென்மையானவர், உறுதியானவர், அனுசரித்துப் போகக் கூடியவர், திறமை மிக்கவர் என்ற வகையில் திருநாவுக்கரசருக்கும் நல்ல பெயர் உள்ளது. அவருக்கான வாய்ப்பும் அதிகமாகவே உள்ளதாம்.
ராகுல் காந்தி ஆதரவு
மேலும் திருநாவுக்கரசருக்கு ராகுல் காந்தியின் ஆதரவும் உள்ளதாக சொல்கிறார்கள். ஏனெனில் தமிழகத்தில் ராகுல் பிரசாரம் செய்தது திருநாவுக்கரசர் போட்டியிட்ட ராமநாதபுரத்தில் மட்டும்தான்.
வசந்த குமாருக்கு வாய்ப்பு?
அதே சமயம் குமரியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வசந்த குமார் காங்கிரஸ் கட்சியின் பலத்தை நிரூபித்துள்ளார். எனவே இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தலைவர் பதவியை தர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் கன்னியாகுமரியில் பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடும் நெருக்கடியை தரலாம் என்றும் கூறப்படுகிறது.
புதுச்சேரியிலும் மாற்றம்
புதுச்சேரியிலும் மாநில தலைவர் மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.