அதெல்லாம் பொய்... ஜேகே ரித்தீஷிடம் ரூ 10 லட்சம் நான் வாங்கவில்லை! - ராதாரவி
ஜேகே ரித்தீஷிடம் நாடக நடிகர்களுக்காக ரூ 10 லட்சம் வாங்கியதாக கூறப்படுவது உண்மையல்ல என்று ராதாரவி கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தில் நாளும் ஒரு விவகாரம் அம்பலமாகி வருகிறது.
நடிகர் சங்க தேர்தல் எப்போது நடக்கும் என்பது நீதிமன்றத்தின் கைக்குப் போய்விட்டது.
நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் ஏகப்பட்ட முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் மீண்டும் புதிதாக பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடிகர் விஷால் சமீபத்தில் நடிகர் ரித்தீஷ் சேலம் நாடக நடிகர்கள் நலனுக்காக நடிகர் சங்கத்தில் ரூ.10 லட்சம் கொடுத்தார் என்றும் அந்த பணம் சேலம் நாடக நடிகர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு ஏற்கனவே நடிகர் சங்க துணைத் தலைவர் கே.என்.காளை மறுப்பு தெரிவித்தார். ஜே.கே.ரித்தீஷ் நடிகர் சங்கத்துக்கோ நடிகர் சங்க அறக்கட்டளைக்கோ எந்த நிதியும் தரவில்லை என்றும் எல்லா உதவிகளையும் அவர் நேரடியாகவே வழங்கினார் என்றும் கூறினார்.
ஆனால் இதனை விஷால் தரப்பு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ஜே.கே.ரித்தீஷ் ரூ.10 லட்சம் தந்ததாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எல்லாம் பொய். பேப்பரில் ஆதாரம் இருந்தால் தரட்டும். இஷ்டத்துக்கு தவறாகப் பேசுகிறார்கள். ரூ.60 கோடி பண பறிமாற்றம் நடந்தது என்றும் அவதூறு பரப்புகின்றனர். என்னிடம் பணம் இல்லையா? நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறேன். வேண்டிய சொத்துக்கள் எனக்கு இருக்கு. நான் எதற்காக அடுத்தவரிடம் வாங்கப் போகிறேன்," என்றார்.