அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. குட்நியூஸ் சொன்ன ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
ஊட்டி : குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று உணவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ ராகி (கேழ்வரகு) இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ராகி வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் தொடங்கி வைத்தனர்.

ஊட்டி அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் உள்ள 592 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக கேழ்வரகு வழங்கப்பட்டது.
விழாவிற்கு முன்பு அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், கேழ்வரகு வழங்கும் இந்த திட்டத்தை துவக்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஊட்டச்சத்து உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சிறுதானிய வகைகள் கிடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் மலைகளின் அரசி மாவட்டத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி. அரசு பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துகிறது.

இதேபோல் கொரோனா காலத்தில் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாயை பொறுப்புடன் வழங்கியது கூட்டுறவுத்துறை. திமுக ஆட்சி பொறுப்பு வந்தவுடன் கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு உச்ச நீதி மன்றமே பாராட்டியது. அதே சமயம் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன" இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
முன்னதாக இன்று உதகையில் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ ராகி (கேழ்வரகு) இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு, நேற்று மாலை ஊட்டியில் தமிழ்நாடு உணவுப்பொருள் நுகர்வு கழக கிடங்கை உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், "கூட்டுறவு கடைகளில் சிறுதானிய விற்பனை தொடங்கப்பட உள்ளது. படுகர் இன மக்களின் கிராமத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராகி விற்பனையை இரண்டு மாவட்டங்களில் பரிசோதனை முறையில் தொடங்க உள்ளோம். இதற்காக மத்திய அரசு 1350 மெட்ரிக் டன் ராகி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி உள்ளது. கூட்டுறவு துறை மூலமாக சிறுதானியங்களை கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறை கடைகளில் சிறுதானிய விற்பனை தொடங்கப்பட உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications