'என் பேன்ட்டைக் கழட்ட முடியாது... கமல் என்ன அல்ட்டிமேட்டா?' - இது ராதாரவியின் ஆபாசம்!
என் பேன்ட்டுக்குள் ஒரு பூச்சி நுழைந்துவிட்டது. அதற்காக பேன்டைக் கழட்ட முடியாது.. கமல் என்ன சினிமாவில் அல்ட்டிமேட்டா என்றெல்லாம் தாறுமாறாகப் பேசினார் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, இரு அணியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோடம்பாக்கத்தில் சரத்குமார் அணியினரும், கே.கே.நகரில் விஷால் அணியினரும், திரைப்பட நடிகர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டனர்.
கோடம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசுகையில், "எனது அப்பா எம்.ஆர்.ராதா நடிகர் சங்கத்துக்காகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்போதுள்ள எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கத்தின் வரலாறு தெரியவில்லை.
தற்போது ஒரு பூச்சிதான் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நான் தற்போது மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். சட்டைக்கு மேல் ஒரு பூச்சி இருந்தால் அதைத்தட்டி விட்டுவிடுவோம். அதே பூச்சி கழுத்தில் உட்கார்ந்து கடித்தால் அதை நசுக்கத்தானே செய்வோம்.
அதேபோல், ஒரு மோசமான பூச்சி எனது பேண்ட்டுக்குள் நுழைந்து கடிப்பதால், இங்கு எனது பேண்டைக் கழற்ற முடியாது. இங்கிருந்து வெளியே சென்றதும், அந்தப் பூச்சியைப் பிடித்து, நீதானே கடித்தாய் எனக் கூறி அதை நசுக்கிவிடுவேன். அதேபோல், 18-ம் தேதி இரவு வரட்டும், அனைவரையும் நசுக்கி விடுவேன்.
கமலைப் பற்றி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா? கமலும், நானும் அரை டிரவுசர் காலத்திலேயே நண்பர்கள்.இருவரும் மாறி மாறிக் கெட்டவார்த்தையில் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வோம். சினிமாவுக்கு யாரும் நிரந்தரம் கிடையாது," என்றார்.
நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து தங்கள் தரப்புக்கு பிரச்சினை கொடுத்த பூச்சி முருகனையும், நாசரை தலைவராக முன்மொழிந்த கமல் ஹாஸனையும்தான் ராதாரவி இப்படித் தாக்கிப் பேசினார்.












Click it and Unblock the Notifications