விஷால் என்றாலே குற்றம் என்றாகிவிட்டது!- ராதா ரவி
விஷால் என்றாலே குற்றம் என்றாகிவிட்டது. அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் ராதாரவி கூறினார்.
'கோவை சினிமா நடன, நாடக, நடிகர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத் தொடக்க நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதை தொடங்கி வைப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி கோவை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் கோவைக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் கோவையில் புதிய சங்கத்தை தொடங்கி உள்ளனர். இதை தென்னிந்திய நடிகர் சங்கத்தோடு இணைக்க முடியுமா? என்று கேட்டனர். இப்போது முடியாது. தேர்தலுக்கு பிறகு இணைக்கலாம் என்று கூறியிருக்கிறேன்.
நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி சார்பில் நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம். மற்ற நிர்வாகிகள் பதவிக்கு யார்? யார்? போட்டியிடுவது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
கருணாநிதியின் ஓட்டு உரிமையை பறித்து விட்டதாக கூறுகிறார்கள். கருணாநிதி கவுரவ உறுப்பினர்தான். அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஓட்டு உரிமை கிடையாது. ஆனால் அவருடைய ஓட்டு உரிமையை பறித்து விட்டதாக விஷால் குற்றம் சொல்கிறார்.
இதேபோல நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்று விஷால் குற்றம் சாட்டுகிறார். அதுவும் தவறான தகவல். இப்படி விஷால் என்றாலே குற்றம் என்றாகி விட்டது. அவர் சொல்வது எதுவும் உண்மையில்லாதது. காரணம் அவருக்கு அனுபவம் கிடையாது. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு வராத அவர் கேட்பதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது," என்றார்.