ஜல்லிக்கட்டுப் போராட்டம் இப்படி முடிந்துவிட்டதே! - ராகவா லாரன்ஸ்
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டம் இப்படி முடிந்துவிட்டது வலிக்கிறது என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள் மெரினா கடற்கரையில் குவிந்து போராடிய தகவல் அறிந்ததும் அவர்களைப் பார்த்து தேவையான உதவிகள் செய்யலாம் என்று அங்கு விரைந்தேன். 200 பேருக்கு மதியம் பிரியாணியும், இரவு உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதன்பிறகு லட்சக்கணக்கில் கூட்டம் வர ஆரம்பித்தது. நான் தினமும் 5 முதல் 6 ஆயிரம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்தேன். மற்றவர்களுக்கு யார் யாரெல்லாமோ, உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்.

7 நாட்களும் அமைதியாகவே போராட்டம் நடந்தது. முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து அவசர சட்டம் நிறைவேற்றும் முடிவு எடுத்தார். அது நிரந்தர சட்டமாக இருக்க வேண்டும் என்பது மாணவர்கள் கோரிக்கையாக இருந்தது. மறுநாள் கவர்னர் கையெழுத்திட்டதும் போராட்டத்தை முடித்துக்கொண்டு நாம் கிளம்பலாம் என்று மாணவர்களிடம் கூறிவிட்டு எனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் இரவு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன்.
ஆனால் காலையில் போலீசார் கூட்டத்தை கலைத்து தடியடி நடத்துவதாக தகவல் வந்து அதிர்ச்சியானேன். ஆஸ்பத்திரியில் இருந்து மெரினாவுக்கு ஓடினேன். போலீசார் உள்ளே விடவில்லை. போலீஸ் மேலதிகாரியிடம் கெஞ்சி மாணவர்கள் கூட்டத்துக்குள் சென்று, 'நாம் ஜெயித்து விட்டோம்' என்று சொல்லி அமைதிப்படுத்தினேன்.
அப்போது சம்பந்தம் இல்லாத சிலர் தனி மாநிலம் வேண்டும் என்றனர். என்னை பேசக் கூடாது என்றும் எதிர்த்தனர். 'பீட்டா' அமைப்பையும், வெளிநாட்டு குளிர் பானங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். நான் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசுகிறேன். பா.ஜ.க. அனுதாபி என்றெல்லாம் குற்றம் சொன்னார்கள்.
மாணவர்கள் இல்லாத வேறு அமைப்புகள் கூட்டத்துக்குள் நுழைந்து இருப்பது புரிந்தது. கவர்னர் கையெழுத்திட்டு சட்டம் நிறைவேறிவிட்டது. மாணவர்கள் போராட்டம் சரித்திரம் படைத்து விட்டது. ஆனால் அதைக் கொண்டாட முடியாமல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது மனதை வலிக்கச் செய்கிறது. கடைசி நாள் வரை அமைதியாக இருந்த மாணவர்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்?
போலீசார் நினைத்திருந்தால் முதல் நாளிலேயே மெரினாவில் கூடவிடாமல் போராட்டக்காரர்களை அடித்து விரட்டி இருக்க முடியும். அவர்கள் கடைசி நாள் வரை பாதுகாப்பு அளித்தனர்.
கலவரத்துக்கு காரணம் யார்? என்பது மர்மமாக இருக்கிறது. முதல்வரும், பிரதமரும் முயற்சி எடுத்ததால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி நிரந்தர சட்டம் நமக்கு கிடைத்தது. இதற்காக அவர்கள் இருவருக்கும் நன்றி. அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு வெற்றி விழா நடத்தி இனிப்புகள் வழங்கி இருவரையும் பாராட்டுவோம். மாணவர்கள் யாரேனும் பிரதமர், முதல்வரை தவறாகப் பேசி இருந்தால் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். மாணவர்களைக் கைது செய்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications