காரைக்கால் பிரச்சார பயணத்தை ரத்து செய்தார் ராகுல் காந்தி... கொலை மிரட்டல் எதிரொலி?
காரைக்கால்: காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது இன்றைய காரைக்கால் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
புதுவை சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க் கிழமை) பிரசாரம் செய்வதாக இருந்தது.
சில தினங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளருமான நாராயணசாமியின் வீட்டிற்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தில், "நீங்களும், உங்கள் கட்சியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பாதகமாக செயல்படுகிறீர்கள். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நீங்கள் பிரசாரம் செய்யும் இடத்தில் உங்களைத் தாக்குவோம். அதேபோல் உங்கள் தலைவரின் மகன் (ராகுல்காந்தி) பிரசார மேடையில் இருக்கும்போது குண்டு வைத்து தகர்ப்போம்," என்று எழுதப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, காரைக்காலில் ராகுல்காந்தி பிரசாரத்தின்போது பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் பிரசாரம் செய்யும் இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராகுல்காந்தி தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல்நிலை காரணங்களுக்காகத்தான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பிரச்சாரத்துக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications