ஜெ. பக்கத்தில் யாரும் இப்படி நின்று பேச முடியுமா.. பஞ்சரான மைக்கால் பஞ்ச் பேசிய ராகுல்
மதுரை: மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றோர் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர்.
ஸ்டாலினை தொடர்ந்து பிரசாரம் செய்து ராகுல் காந்தி பேசினார். அவர் ஆங்கிலத்தில் பேசியதை மூத்த தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளருமான திருநாவுக்கரசர் தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.

இதற்காக ராகுல் காந்திக்கு போடியம் அமைக்கப்பட்டிருந்தது. அவருக்கு சற்று அருகில் திருநாவுக்கரசருக்கு ஸ்டேன்டுடன் மைக் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படியாக, சில நிமிடங்கள் மொழி பெயர்ப்பு சுமுகமாகத்தான் போனது.
ஆனால், பேசிக்கொண்டிருந்தபோது, திருநாவுக்கரசின் மைக் திடீரென கோளாறு செய்தது. இதனால் அவர் பேசியது கூட்டத்தினருக்கு கேட்கவில்லை. மைக்கை தட்டி பார்த்தார் திருநாவுக்கரசர். இதை பார்த்த ராகுல் காந்தி, தனது போடியத்தில் இருந்த 2 மைக்குகளில் ஒன்றை, பயன்படுத்திக்கொள்ளுமாறு திருநாவுக்கரசரை அழைத்தார்.
இதையடுத்து, போடியத்தில் இருந்த மைக்கில் ஒன்றை திருநாவுக்கரசரும், மற்றொன்றை ராகுல் காந்தியும் பிடித்தபடி பேசினர். அப்போது ராகுல் காந்தி சிரித்தபடியே ஒரு கமெண்ட் அடித்தார், "ஜெயலலிதா கூட்டத்தில் இப்படியெல்லாம் நடக்காது. அருகில் நின்று பேச அவர் வேறு யாரையும் அனுமதிக்க மாட்டார்" என்றார் ராகுல்.
இதை சிரித்தபடியே திருநாவுக்கரசும், தமிழில் மொழி பெயர்க்க, கூட்டத்திற்கு வந்த தொண்டர்களும், தலைவர்களும் அதைக்கேட்டு கலகலவென சிரித்தனர். ராகுல் காந்தி தனது பேச்சின்போது, ஜெயலலிதா தன்னைதானே அறிவாளி என்றும் பிறரை முட்டாள் என்றும் நினைக்க கூடியவர், நான்கு சுவர்களுக்கு உள்ளே முடங்கி கிடந்து மக்களை மதிக்காதவர் என்று விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications