ஸ்டாலின் வீட்டில் டீ பார்ட்டி... முதன் முறையாக வந்த ராகுல்காந்தி
ஸ்டாலின் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்தார். முதன்முறையாக ஸ்டாலின் வீட்டிற்கு வந்தார் ராகுல்காந்தி.
சென்னை: கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்க வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி முதன்முறையாக ஸ்டாலின் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க அவரது வீட்டிற்கு வந்தார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

விழாவில் பங்கேற்க வந்துள்ள தலைவர்களுக்கு சட்டசபை எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து தருகிறார். இதில் பங்கேற்பதற்காக முதன் முறையாக ஸ்டாலின் வீட்டிற்கு வருகை தந்தார் ராகுல்காந்தி.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திமுக பத்தாண்டு காலம் இருந்த போதும், பலமுறை சென்னைக்கு ராகுல்காந்தி வந்த போதும் கோபாலபுரம் வீட்டிற்கோ, ஸ்டாலின் வீட்டிற்கு ராகுல்காந்தி வந்ததில்லை.

ஸ்டாலின் வீட்டிற்கு வந்து ராகுல்காந்தி தேநீர் விருந்தில் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேநீர் விருந்தில் பங்கேற்ற ராகுல் காந்தி வைரவிழாவில் பங்கேற்க கிளம்பி சென்றார்.












Click it and Unblock the Notifications