மெர்சலுக்கு ஆதரவாகப் பேசியதாலேயே ஐடி ரெய்டு.. சந்தேகம் கிளப்பும் விஷால்
மெர்சலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நேரத்தில் சோதனை நடந்தது சந்தேகம் அளிக்கிறது என்றார் நடிகர் விஷால்
சென்னை : மெர்சல் திரைப்படத்தை இணையத்தில் பார்த்த ஹெச்.ராஜா தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஞாயிறன்று கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று விஷால் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது.
சமீபத்தில் பாரதிய ஜனதாவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாக தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால், உடனடியாக ஹெச்.ராஜா தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், நேற்று விஷாலின் வீடு மற்றும் வடபழனியில் இருக்கும் தயாரிப்பு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. தயாரிப்பில் எதாவது முறைக்கேடு நடந்திருக்கிறதா, வரி ஏய்ப்பு செய்திருக்கிறாரா? என்று சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ஆங்கில மீடியா ஒன்றிடம் கருத்துத் தெரிவித்த விஷால், 'சோதனை செய்ததில் தவறு இல்லை. ஆனால், மெர்சல் திரைப்பட வசனங்களை நீக்கச் சொன்னதை எதிர்த்ததையும், இணையத்தில் படம் பார்த்த பா.ஜ.க தலைவரை மன்னிப்பு கேட்கச் சொன்னதையும் வைத்து பார்க்கையில் அதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக சந்தேகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை' என்று கூறி இருக்கிறார்.
இதற்கு முன்னதாக, 'ஒரு தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மெர்சல் திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இது திருட்டுத்தனமாக இணையத்தில் படம் வெளியிடுவதை ஆதரிப்பதைப் போல இல்லையா? இப்படிச் சொல்ல அவர் அசிங்கப்பட வேண்டும்' என்று காட்டமாக விமர்சித்திருந்தார் விஷால்.
மேலும் ஹெச்.ராஜா நடிகர் விஜய் குறித்து வெளியிட்ட மதரீதியிலான கருத்துக்கு பதிலளித்த விஷால், 'திரைப்படங்களுக்கு மத சாயம் பூசுவதை எச்.ராஜா நிறுத்த வேண்டும் என்றார் மேலும், ஜோசப் என்கிற பெயரும் விஜய்க்கு பொருத்தமாகத் தான் இருக்கிறது என்றார்' விஷால்.












Click it and Unblock the Notifications