நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது பிரச்சனையா? உடனே 1512- க்கு டயல் செய்யுங்க..
சென்னை: ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கும் வகையில் 1512 என்ற சேவை எண் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், செயின் பறிப்பு, மதுகுடித்து விட்டு சண்டை போடுதல் போன்று ரயில்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, தமிழக ரயில்வே காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டாலும், பிற மாநிலங்களில் பயணிக்கும்போது, பாதிக்கப்படும் பயணி புகார் தெரிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்க்க, நாடு முழுவதும் பொது புகார் எண் கொண்டு வரும் நடவடிக்கையில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது.

இதன்படி தற்போது, 1512 என்ற எண் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ரயில்வே போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

‘‘ரயில் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் புகார் செய்யலாம். புகார் செய்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கின்றனர் ரயில்வே போலீசார்.












Click it and Unblock the Notifications