ரயில் நிலையத்தில் படுத்துக் கிடந்த முதியவரை தடியால் அடித்து காலால் உதைத்த போலீஸ்காரர்!
சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் படிக்கட்டில் படுத்துக் கிடந்த முதியவரை லத்தியால் அடித்தும், காலால் உதைத்தும் கொடூரமாக நடந்து கொண்டார் ஒரு போலீஸ்காரர். இதைப் பார்த்து கொதிப்படைந்த பொதுமக்கள் திறண்டு வந்து அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நகர ரயில் நிலையங்களில் வயதான முதியவர்களைப் பார்க்கலாம். நடக்க முடியாமல் வயோதிகம் காரணமாக படுத்தபடி பிச்சை எடுத்து வயிற்றை கழுவி வருபவர்கள் அவர்கள்.

பரிதாபத்துக்குரிய அவர்களுக்கு தினசரி ரயில் நிலையம் வரும் பலர் காலையிலும், மாலையிலும் சாப்பிட ஏதாவது பார்சல் வாங்கிக் கொடுப்பதையும் அன்றாடம் காணலாம். பலர் தங்களது வீட்டில் செய்யும் உணவைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். தீபாவளி, பொங்கல் சமயத்தில் உடைகளையும் வாங்கிக் கொடுப்போரும் உண்டு.
ரயில் பயணிகள் பலரும் இந்த முதியவர்கள் மீது அன்பு செலுத்துபவர்கள்தான். இந்த நிலையில் நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஒரு மோசமான காட்சியை மக்கள் காண நேர்ந்தது. அங்கு ஒரு முதியவர் ரயில் நிலைய படிக்கட்டில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த ரயி்லவே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் ஒருவர் அந்த முதியவரை லத்தியால் அடித்தார். பின்னர் காலாலும் எட்டி உதைத்தார். இதனால் தடுமாறிய முதியவர் படிக்கட்டிலிருந்து உருண்டு கீழே விழுந்தார். இதில் அவருக்கு கை கால்களில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
இதைப் பார்த்து பொதுமக்கள் கோபமடைந்தனர். அந்த போலீஸ்காரருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். ரயில் நிலையமே போர்க்களம் போல மாறியது. பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து உயரதிகாரிகள் திரண்டு வந்தனர். அந்த முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் அமைதி அடைந்து கலைந்து சென்றனர்.
சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது ஒரு போலீஸ்காரரும் அந்த இடத்தில் இல்லை. யாருமே அந்த இடத்தில் இருக்கவில்லை என்று ரயில்வே போலீஸ் உயர் அதிகாரியும் பின்னர் பேட்டி கொடுத்தார். ஆனால் அப்பாவி முதியவரை காலால் உதைக்க மட்டும் கரெக்டாக வந்து விடுகிறார்கள்!












Click it and Unblock the Notifications