பல்லாவரத்தில் தடம் புரண்டு கிடக்கும் தண்டவாளங்கள்.. அவதியில் மக்கள்!
சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே சாலையில் தண்டவாளங்கள் போட்டு வைக்கப் பட்டிருப்பதால், பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகி வருகின்றனர்.
பல்லாவரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களைக் கடந்து பயணிகள் விபத்துகளில் சிக்காத வண்ணம் இருப்பதற்காக சுரங்கபாதை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், அந்த சாலையில் ரயில்வேவுக்குச் சொந்தமான தண்டவாளங்கள் அதிகளவில் போட்டு வைக்கப் பட்டுள்ளன.

அத்தண்டவாளங்கள் சீரற்ற முறையில் கிடப்பதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்லும் போது பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதே போல், இரவு நேரங்களில் அந்த சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள், இருட்டில் தண்டவாளங்கள் கிடப்பது தெரியாமல் அவற்றில் மோதி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சமீபகாலமாக இந்த தண்டவாளங்களால் அதிக அளவு இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட்டு அந்த தண்டவாளங்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications