கன மழையால் இந்த ஆண்டு தீபாவளியன்று தீ விபத்துக்கள் மிக மிக குறைவு
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது நடந்த பட்டாசு விபத்துக்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 310 தீயணைப்பு நிலையங்களில், அதிகாரிகள் உட்பட 6,805 பேர் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு கட்டாய பணியில் இருந்தனர்.
ஆனால், தீபாவளிக்கு முதல் நாள் ஆரம்பித்த அடை மழை தீபாவளியன்றும் தொடர்ந்ததால் மக்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் முடங்கினர். இதனால் விபத்துக்களும் குறைந்தன.
200க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு பட்டாசு விபத்து தொடர்பாக ஒரு அழைப்புக் கூட வரவில்லையாம்.
ஆனால் அதே நேரத்தில், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக தீயணைப்புப் படை வீரர்களுக்கு அது தொடர்பான பணிகள் மிக அதிகமாக இருந்தன.
அதே போல தமிழகம் முழுவதும் உள்ள 108 அவசரகால ஆம்புலன்ஸ் சர்வீசுக்கும் பட்டாசு விபத்து தொடர்பான அழைப்புகள் மிக மிகக் குறைவாக வந்தன.
அதே நேரத்தில் தீபாவளி தினத்தன்று விபத்துக்களே ஏற்படாமல் இல்லை. பட்டாசு வெடித்ததில் மாநிலம் முழுவதும் 79 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 தீ விபத்துகள் ராக்கெட் பட்டாசுகளால் ஏற்பட்டவை.
அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 10, திருச்சி மாவட்டத்தில் 7, தஞ்சை மாவட்டத்தில் 6, திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. ஆனால், இவை சிறிய அளவிலான பாதிப்புகளையே ஏற்படுத்தின.
கனமழையை எதிர்கொண்ட சென்னையில் தீபாவளி தினத்தில் 4 இடங்களில் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் மிகக் குறைவான அளவு விபத்துகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.