நீலகிரியில் நீடிக்கும் கனமழை... தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
சூறைக் காற்றுடன் இரவு பகலாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.

இருளில் மூழ்கி கிராமங்கள்
பலத்த சூறாவளிக் காற்றினால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உதகை நகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன.

ரயில் சேவை ரத்து
உதகை, குன்னூர் ரயில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்துள்ளதால் இன்றும் நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மழை காரணமாக அறைகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

வாழை மரங்கள் சேதம்
கூடலூரில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மண்வயல் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு
கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கூடலூர் அருகேயுள்ள காசிம்வயல், வி.வி நகர், கொக்காகாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

மீட்புப்பணிகள்
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் சோகம்
விவாசய நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளதால், வாழை உள்ளிட்ட விவாசய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன. கனமழை தொடர்வதால் சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை
மழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

பில்லூர் அணை
தொடர் மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து பவானியாற்றில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு
நேற்று 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் பவானியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், அணைக்கான நீர் வரத்து குறைந்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மழை நீடிக்கும்
தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவான மழை அளவு
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியிலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் பெரியாறில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, வால்பாறையில் 100 மில்லி மீட்டரும், உதகையில் 90 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications