கடந்தாண்டு வெள்ளத்தை ஞாபகப்படுத்தி... சென்னையில் காலையிலேயே ‘கிலி’ ஏற்படுத்திய மழை!
வடகிழக்கு பருவமழை காரணமாக, தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றதழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், சென்னையில் இன்று காலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை: சென்னையில் இன்று காலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சிறிதுநேரமே பெய்தாலும் பலமாக மழை பெய்ததால், மக்களுக்கு கடந்தாண்டு வெள்ளம் நினைவில் வந்து, சிறிது பயம் ஏற்பட்டது மறுக்க முடியாது.
கடந்தாண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் தொடந்து நான்கு நாட்கள் கடலூரில் பெய்த கனமழையால், அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பாலங்கள் உடைந்து சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியகாட்டுப்பாளையம், குறிஞ்சிப்பாடி, விசூர் என கடலூர் மாவட்டம் முழுவதும் நவம்பர் 12-ம் தேதி வரை 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த கனமழையால் சென்னையிலும் பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் உட்பட புறநகர்களில் வெள்ளம் ஏற்பட்டது. குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக, தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றதழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் சில இடங்களில் இன்று(13-11-16) மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று காலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மயிலாப்பூர், கிண்டி, அடையாறு, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம். ராமாபுரம் ஆகிய இடங்களிலும் மழை பெய்தது.
காலையிலேயே பெய்த இந்த திடீர் மழையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். சிறிது நேரமே பெய்தாலும், மழை வெளுத்து வாங்கியதால் மக்களுக்கு மனதில் லேசான அச்சம் ஏற்பட்டது.
ஆனால், சிறிது நேரத்திலேயே மழை ஓய்ந்தது. பிறகு மெல்ல சூரியன் எட்டிப் பார்க்கவும் தான் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனபோதும் தொடர்ந்து வெயில் அடித்தாலும், லேசான மேகமூட்டத்துடன் வானிலை மந்தமாகவே காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications