கோவை, திருப்பூர், சிவகாசியில் வெளுத்து வாங்கிய கனமழை
திருப்பூர்: கோவை, திருப்பூர், திண்டுக்கல், உதகை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. திருப்பூரில் பெய்த கனமழையால் நகரில் பல மணிநேரம் மின் தடை ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகம் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தில் உள் பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரில் பல மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும் பலத்த மழை காரணமாக பல்லடம் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்லில் பகலில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், இரவில் நல்ல மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மதுரை மாவட்டம் பேரையூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சிவகாசியில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே உதகையில் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications