இன்னும் 2 நாட்களைக்கு கடலோரங்களில் மழை பெய்யுமாம்
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த்த தாழ்வு மண்டலம் நாகை அருகே கரையைக் கடந்து விட்ட போதிலும் அது தமிழகப் பகுதிகளில் அது ஒரு தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக பரவி காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும், தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக பரவி உள்ளது. இதன் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும். தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. தற்போது லேசாக மழை நின்றுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 123.9 மில்லிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 80.4 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது. இன்று காலை வரை செம்பரம்பாக்கத்தில் 125 மி.மீ, கொரட்டூர் 120 மி.மீ., பூண்டி 93 மி.மீ, தாமரைப்பாக்கம் 35.2 மி.மீ., சோழவரம் 14.14 மி.மீ. மழை பெய்து இருந்தது.
வெள்ள நீரில் மிதந்த சென்னை
இரவெல்லாம் பெய்த மழை காரணமாக சென்னை நகரின் பல பகுதிகள் வழக்கம் போல வெள்ள நீரில் மிதந்தன. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
புறநகர்ப் பகுதிகள் பல நீரில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications