மழை குறையப் போகிறதாம்... காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மறைஞ்சு போச்சாம்!
சென்னைக்கு தென் கிழக்கே வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகை, திருவாரூர், கடலூர், மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்கள் வெள்ளக் காடானது. கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மறைந்து விட்டது.
மேலும் நேற்றும் இன்றும் கூட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் நல்ல மழை பெய்தது. ஆனால் தற்போது இந்த மழை நின்று விட்டது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லட்சத்தீவு பக்கம் நேற்று நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரை பக்கமாக சென்று தற்போது மறைந்து விட்டது. இதன் காரணமாக உருவான மேலடுக்கு சுழற்சி ஆங்காங்கே மேகமூட்டமாய் நிற்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். பின்னர் படிப்படியாக மழை குறையும். இனி புதிதாக காற்றழுத்த தாழ்வு வரும்போது மழையை எதிர்பார்க்க முடியும் என்றார்.
காத்திருப்போம் அடுத்த மழைக்கு.. கையில் குடையோடு!