எம்ஜிஆர் மறைந்தபோது அவமான துயருடன் 21 மணிநேரம் நின்ற அதே ராஜாஜி ஹாலில் மீளாதுயிலில் ஜெ.
ஜெயலலிதா மீளா துயிலில் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹால் அவரது வரலாற்று பக்கங்களில் பிரிக்க முடியாத ஒன்று.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைந்த போது 2 நாட்கள் 21 மணிநேரம் அவமான துயருடன் எந்த ராஜாஜி ஹாலில் கால்கடுக்க நின்றிருந்தாரோ அதே இடத்தில்தான் இன்று மீளா துயிலில் இருக்கிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
எம்ஜிஆரால் அதிமுகவுக்குள் கொண்டுவரப்பட்டவர் ஜெயலலிதாதான்... ஆனாலும் அவரை எம்ஜிஆரின் அமைச்சரவை சகாக்கள் ஏற்கவில்லை. எம்ஜிஆர் மறைந்த போதும்கூட அவர் மிக மோசமாக இழிவுபடுத்தார் என்பதை நாடறியும்.

1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அதிகாலையில் எம்ஜிஆர் மறைவுச் செய்தி அறிவிக்கப்படுகிறது... ராமாவரம் தோட்டத்துக்கு தலைவரை காண ஓடினார் ஜெயலலிதா. ஆனால் அங்கு ராமாவரம் தோட்டத்தின் அத்தனை கதவுகளுமே ஜெயலலிதாவுக்கு அடைக்கப்பட்டன.
எம்ஜிஆரின் உடலை பார்க்கவிடாமல் கடுமையாக தடுக்கப்பட்டார் ஜெயலலிதா. அன்று எம்ஜிஆரின் உடல் ராஜாஜி ஹாலில்தான் வைக்கப்பட்டிருந்தது. இதே ராஜாஜி ஹாலில்தான் அன்று 2 நாட்களாக சுமார் 21 மணிநேரம் எம்ஜிஆரின் உடல் அருகே சோகத்துடன் இருந்தார் ஜெயலலிதா.
அந்த இறுதிநிகழ்வின் போதுதான் எம்ஜிஆர் உடல் ஏற்றப்பட்ட ராணுவ வண்டியில் ஏற முயற்சித்தார் என்பதற்காக ஜானகி எம்ஜிஆரின் உறவினரான நடிகர் தீபனால் கீழேபிடித்து தள்ளிவிடப்பட்டார் ஜெயலலிதா. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த கேபி ராமலிங்கம் மிக இழிவான வார்த்தைகளால் ஜெயலலிதாவை விமர்சித்தார்.
தம்முடைய பொதுவாழ்க்கையில் இத்தனை ஏகடியங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொண்டுதான் நெருப்பாற்றில் நீந்தி சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பிடித்து இன்று ராஜாஜி ஹாலில் மீளா துயிலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications