ராஜபக்சே வருகை: மோடிக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் குவியும் எதிர்ப்புகள்
சென்னை: மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மோடியின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் ட்விட்டர் கணக்கில் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெறுகிறது.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் பிரதமர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோடியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது என்றால் அது சமூக வலைதளம் என்றால் அது மிகையாது. அவரது பாணியிலேயே அவருக்கு கருத்து சொல்ல உலகத் தமிழர்கள் முடிவு செய்து மோடியின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் ட்விட்டர் கணக்கில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்களாம்.
மோடியின் ட்விட்டர் கணக்கில் கோடிக்கணக்கில் எதிர்ப்பை தெரிவிக்க உலக தமிழர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் அவரின் ஃபேஸ்புக் கணக்கில் பெருமளவு குறுஞ்செய்தி அனுப்பவும் முடிவு செய்துள்ளார்களாம்.