சசி போஸ்டரை கிழித்தவரை அடித்து துவைத்த ராஜேந்திர பாலாஜிக்கு பால்வளம்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருந்த சசிகலா போஸ்டரை கிழித்த அதிமுக தொண்டரை அடித்து துவைத்த ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் பால்வளம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் சசிகலா போஸ்டரை கிழித்த அதிமுக தொண்டர் ஒருவரை அடித்து துவைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது, அதிமுகவின் தொண்டர்கள் பலர் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது, சசிகலாவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன.
அப்போது, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன் சசிகலாவை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை அதிமுக தொண்டர் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த எளிய அதிமுக தொண்டரை பிடித்து அடித்து உதைத்தார். பின்னர் போலீசில் ஒப்படைத்தார்.
'சின்னம்மாவிற்கு உனக்கும் என்ன சம்பந்தம்' என்று கேட்டு உதைத்த ராஜேந்திர பாலாஜிக்குதான் தற்போது மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த அதே பால்வளத் துறையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையிலும் ஒதுக்கியுள்ளது.
பெரும் இழுபறிக்கு இடையில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிமுக சட்டசபைக் குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்தார். இதனையடுத்து, எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.