ரஜினி நன்கு படித்தவர்... ஆங்கிலத்தில் உரையாட முடியும்- சு.சுவாமிக்கு பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி
ரஜினிகாந்த் நன்கு படித்தவர், அவரால் ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்று சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
வள்ளியூர்: பொதுவாழ்க்கைக்கு ஏற்றவர் ரஜினிகாந்த்; நன்கு படித்தவர், ஆங்கிலத்தில் உரையாடவும் முடியும் என்று சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கடந்த 21 ஆண்டுகளாக அவது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அவரோ அரசியலுக்கு வராமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அரசியல் குறித்து ரஜினி பேசினார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
ஆதரவும், எதிர்ப்பும்...
அரசியலுக்கு வருவதாக ரஜினி நேரிடையாக சொல்லாவிட்டால் இதை அவரது மறைமுக பதிலாக எடுத்துக் கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ரஜினி முறையாக அறிவிப்பதற்கு முன்னரே பல்வேறு அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
சு.சுவாமி கருத்து
ரஜினி குறித்து சுப்பிரமணியன் சாமி தெரிவிக்கையில், கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர். படிக்காதவர், கொஞ்சமும் கல்வியறிவு இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஜினி படித்தவர்
இதற்கு பதிலளிக்கும் வகையில் வள்ளியூரில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரஜினி நன்கு படித்தவர். அவரால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். அவர் பொதுவாழ்க்கைக்கு ஏற்றவர்.
அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்
நாட்டுக்கு நன்மை பயக்கும் கேள்விகளை ஸ்டாலின் கேட்க மாட்டார். எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் கல்வித் தரம் உயரும். திமுகவினர் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் டெல்லியில் என்னுடன் திமுக எம்பிக்களும் இந்தி படித்தனர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.