ரஜினி விவரமாத்தான் இருக்கார்.. நாமதான் காமெடி பீஸாயிட்டிருக்கோம்!
எப்போதுமே விவரமாக செயல்பட்டு வருகிறார் ரஜினிகாந்த்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் குழப்புகிறார், தெளிவில்லை என்று நிறைய பேசி வருகிறார்கள் பலர். உண்மையில் ரஜினி தெளிவாகத்தான் இருக்கிறார். பார்க்கும் நாம்தான் குழம்பிப் போயிருக்கிறோம்.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற அரசியல் பிம்பங்கள் இருக்கும்போதும், இப்போதும் ரஜினிக்கு என்று ஒரு பிம்பம் இருப்பது உண்மை. அதை ரஜினியும் நன்றாகவே அறிந்துள்ளார். இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்ற சுதந்திர உரிமையின்படி ரஜினியும் கட்சி தொடங்கலாம். ஆனால், கட்சி என்பது தனி நபர் சார்ந்தது கிடையாது.

தொண்டர்களா? ரசிகர்களா?
ரஜினிக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் எல்லாம் தொண்டர்கள் ஆகிவிடுவார்களா? அப்படியே தொண்டர்கள் ஆகிவிட்டாலும் ரஜினியின் சிந்தனைகள் அவர்களிடமும் பிரதிபலிக்குமா? ரஜினி போலவே அவரது தொண்டர்களும் செயல்படுவார்களா? அல்லது அவர்கள் வெறும் ரசிக மனநிலையிலேயே இருப்பார்களா? என்ற இந்த கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது. பொதுவாக அது எந்த கட்சியாக இருந்தாலும், தலைவன்-தொண்டர்களிடம் ஒரே மாதிரியான சிந்தனையும் செயலும் கொள்கையும் வெளிப்பட்டால்தான் அந்த கட்சி வெற்றி பெறும். அதை ரஜினி சாத்தியமாக்குவாரா என்பதே காலம் அவர் முன்வைத்துள்ள முதன்மை சவாலாக உள்ளது.

பஞ்ச் டயலாக்
சினிமாவில் பஞ்ச் டயலாக்குகளை ரஜினி மட்டுமல்லாமல் பல்வேறு நடிகர்கள் தன் படங்களில் பேசி வருகிறார்கள். ரஜினியைப் போல, விஜய், கமல், அஜித் உள்ளிட்டவர்களும் தங்கள் படங்களில் பஞ்ச் டயலாக்குகளை பேசுகிறார்கள். இவையெல்லாம் இவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார்கள் என்பதற்காக எழுதப்பட்ட வசனங்கள் அல்ல. அவை முழுக்க முழுக்க தங்களுடைய ரசிகர்களுக்காக சினிமா வணிகத்துக்காக எழுதப்பட்டவைகள். நடிகர்களின் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை பிடித்து இழுத்தும் ஒரு பொறி. இதன் மூலம் ஹீரோ அரசியலுக்கு வரப்போகிறார் என்ற சமிக்ஞையையும் தனது ஹீரோ அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்குவது. அந்த வகையானதுதான் ரஜினிக்காக எழுதப்பட்ட பஞ்ச் டயலாக்குகளும். இந்த பஞ்ச் டயலாக் விஷயத்திலும் ரஜினி விவரமாத்தான் இருந்திருக்கார்.

வாய்ப்பை தவறவிட்டார்
தமிழ்சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் ரஜினி 1996-க்கு பிறகு அவருடைய அரசியல் முகம்வேறுமாதிரியாக பிரதிபலித்தது. ரஜினி நினைத்திருந்தால் 1996-ம் ஆண்டிலேயே அரசியலுக்கு வந்திருக்கலாம். தமிழகத்தில் அப்போது அதற்கேற்ற காலமும் சூழலும் இருந்தது. ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்பதை அவர் மூலமே தெரிந்து கொள்ள தொலைக்காட்சிகள் முன் கோடிக்கணக்கான மக்கள் காத்திருந்தார்கள். ஆனால், அந்த வாய்ப்பை ரஜினி தவற விட்டுவிட்டார். அன்று ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இருந்தபோதிலும், ரஜினி தெளிவாகவே இருந்தார். தனக்கு இருக்கும் சினிமா கவர்ச்சியை வைத்து இன்னும் நிறைய படங்கள் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடித்து சம்பாதிக்க முடியும் என்று நம்பினார். எனவே ரசிகர்களை மூலதனமாக்கி சம்பாதிக்கும் விஷயத்திலும் ரஜினி விவரமாத்தான் இருந்திருக்கிறார்.

தலித் மக்களை கவர்ந்தார்
எம்ஜிஆர் பாணியைதான் ரஜினியும் பின்தொடர்கிறார். அரசியலுக்கு வரப்போவதை என்றோ உறுதி செய்துவிட்ட ரஜினி, தலித் தரப்பு மக்களை கவர்வதற்கு கபாலி, காலா படங்களை கையிலெடுத்தார். இதன்மூலம் தலித் மக்கள் ரஜினி பக்கம் பெருமளவு சாய்ந்துவிட்டதும் நிதர்சனமான உண்மையே. இதற்காக ரஜினியை குற்றம் சாட்டவும் முடியாது. இப்படியான பாத்திரங்களை ஏன் மற்ற நட்சத்திர நடிகர்கள் இதுவரை ஏற்று நடிக்கவில்லை என்ற கேள்வி எழும்போது ரஜினியை குற்றம் சாட்டுவது அர்த்தமற்றதாகிறது. ஆனால் தலித்துகளை கவரும் விஷயத்திலும், ரஜினி விவரமாத்தான் இருந்திருக்கிறார்.

ரஜினியின் பிரவேசம்
பலதரப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து தமக்கு எந்தவிதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அரசியலை உன்னிப்பாகவே கவனித்து வருகிறார் ரஜினி. உண்மையிலேயே ரஜினியின் வருகை அரசியல் தரப்பினருக்கு பீதியை கொடுப்பது உண்மையே. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு பாதிப்பு இருக்கும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், ஒன்று மட்டும் உண்மை. சினிமாவிலிருந்து அரசியல் பிரவேசம் செய்த எம்ஜிஆரை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை, அதேபோல சினிமாவிலிருந்து வந்த ஜெயலலிதாவையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிறகு எப்படி ரஜினியை மட்டும் தடுத்து நிறுத்திட முடியும்?

கட்சிகளின் எதிர்ப்புகள்
ரஜினியை பாஜகதான் இயக்குகிறது என்றும், ரஜினி பாஜகவுடன் தான் கூட்டணி வைப்பார் என்றும் பலரும் கணித்து வருகிறார்கள். யாருடன் கூட்டணி வைப்பது என்பது ரஜினியின் முடிவு அதை விமர்சிக்க விமர்சகர்களுக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத அரசியல் கட்சிகள் யார் இருக்கிறார்கள்? ரஜினியை தன் பக்கம் இழுத்து கொள்ள பாஜக முயற்சி செய்வது அப்பட்டமாகவே தெரிகிறது. அதற்கு காரணம், திராவிடகட்சிகளை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று நினைப்பதே. அதற்காக ரஜினி போன்ற ஆட்களை பயன்படுத்தி கொள்ளபார்க்கிறது. அவ்வளவுதான். அதிமுகவோ, ரஜினி விஷயத்தில் பகை, உறவு இல்லாமல் மௌனம் காத்து சாமர்த்தியத்தை காட்டி வருகிறது.திமுகவோ சமூகவலைதளங்களில் அதிகமாகவே விமர்சித்து வருகிறது. முற்போக்கு இயக்கங்கள் ரஜினிக்கு என்றுமேஎதிர்ப்புதான்.

யாரையுமே எதிர்ப்பதில்லை
ரஜினியை பொறுத்தவரை யாரையுமே எதிர்க்காமல் இருக்கிறார். ஆனால், இது சரியான விஷயம் இல்லை. அரசியலில் ஈடுபடுபவருக்கு முதலில் பிரச்சனைகள் மீதும், நபர்கள் மீதும் தெளிவான - உறுதியான பார்வை வேண்டும். கொள்கை ரீதியாக ஒரு கறார் தன்மையை கடைபிடிக்க வேண்டும். நமக்கு எல்லாரும் வேண்டும், யாருடைய வெறுப்பையும் அதிருப்தியையும் சம்பாதிக்க வேண்டாம் என்ற மனப்பான்மை தமிழ்நாட்டு அரசியலுக்கு பொருந்தாது. இப்படி யாரையுமே பகைத்து கொள்ளக்கூடாது என்று நினைப்பது சரியல்ல. யாரையும் எப்போதும் பகைத்து கொள்ளாத விஷயத்திலும் ரஜினி விவரமாத்தான் இருந்திருக்கிறார்.

துறவு மனப்பான்மை
அதேபோல, ரஜினிக்கு ஓரளவு துறவு மனப்பான்மை உண்டு. பணம், புகழ், மனைவி, மக்கள் என்று இப்போது எந்த குறையும் இல்லாத நிலையிலேயே இமயமலை அடிவாரத்திற்கு போய் தனித்து தியானம் செய்யும் ரஜினியால், அரசியல் தோல்விகளையும், எதிரிகளின் அவதூறுகளையும், சொந்த வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் எதிர்கொள்ளும் மனோவலிமை அவரிடம் இருக்குமா? விரக்தியின் விளிம்பிற்கு அவரை விரட்டிவிடாதா? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், இந்த மனநிலை அவருக்கு சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது.

தெளிவாக இருக்கிறார்
அரசியல் பார்வையாளர்களுக்கும் அரசியல் சார்புடையவர்களுக்கும் ரஜினியின் செயல்கள் குழப்பமாக இருக்கலாம். ஆனால், ரஜினி அவசரப்பட்டு எதையும் அதிரடியாக செய்ய முயற்சிப்பது இல்லை. நிதானமாகவே செயல்படுகிறார். அரசியல் கட்சி தொடங்கும் சமயத்தில் தனது சினிமா பிம்பத்தையும், பிசினஸையும் மேலும் வலுவாக்க முதுமையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். விமர்சனங்களைக் கண்டும் அவர் குழப்பமடைவதில்லை. காரணம் இவரது இப்போதைய முக்கியக் கவனங்களில் ஒன்றாக பிசினஸும் இருக்கிறது. எனவே ரஜினி அப்போதிருந்து இப்போதுவரை விவரமாகவும் தெளிவாகவும்தான் இருக்கிறார். ஆனால், மக்கள்தான் எப்போதுமே குழப்பமடைகிறார்கள்.












Click it and Unblock the Notifications