அரசியல் நிலைப்பாடு அறிவிப்பு என்று சொல்லிய ரஜினி பேச்சில் தெளிவு தெரிகிறது.. 'கண்டுபிடித்த' தமிழிசை
அரசியல் நிலைப்பாடு அறிவிப்பு குறித்த ரஜினியின் பேச்சில் இந்த முறை தெளிவு தெரிவதாக தமிழிசை குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து பேசி இருப்பதில் இந்த முறை உறுதியும், தெளிவும் தெரிகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி இன்று தன் ரசிகர்கள் சந்திப்பை துவக்கி வைத்து பேசினார். இன்று தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் ரஜினி.

தனது அரசியல் பிரவேசம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று அதுகுறித்து தனது ரசிகர்களிடம் மனம் திறந்து உள்ளார் ரஜினி. நிகழ்வில் பேசும்போது, என்னுடைய அரசியல் அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாகவே நான் அரசியலில் தான் இருக்கிறேன். அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரிவதால் தான் அரசியலுக்கு நேரடியாக வருவதில் தயக்கமாக இருக்கிறது. அரசியலில் வீரத்தைவிட விவேகமும், வியூகமும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், இந்த முறை நிச்சயம் டிசம்பர் 31ம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார் ரஜினி. அதே வேளையில், தான் அரசியலுக்கு வருவதாக சொல்லவில்லை தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையே சொல்ல இருக்கிறேன் என்று அனைவருக்கும் சஸ்பென்ஸும் வைத்து இருக்கிறார்.
இதுகுறித்து பாஜக தமிழிசை செளந்திரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார். ரஜினி டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து உள்ள பேச்சில், நல்ல உறுதியும் தெளிவும் தெரிவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், ரஜினி அரசியலுக்கு வருவதை பாஜக எப்போதுமே வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அரசியல் குறித்த அவரது நிலைப்பாடு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications