Rajini: விஜய் முதல்வராவதை தடுக்க! ஸ்டாலினுடன் பேசினேனா? நான் தரங்கெட்ட ஆளு இல்லை- ரஜினி விளக்கம்
சென்னை: விஜய் முதல்வராவதை தடுத்து நிறுத்தி, அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகள் ஆட்சி அமைக்க நான் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு இந்த ரஜினி தரங்கெட்ட ஆளு நான் இல்லை என போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.
தேர்தல் முடிவுகள் வந்ததும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது வெற்றி பெறும் போது மட்டுமில்லை, கஷ்டகாலங்களிலும் கூட இருப்பேன் என ரஜினி, ஸ்டாலினுக்கு ஆறுதல் சொன்னதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து விஜய் முதல்வராவதை தடுக்க அதிமுக திமுக ஆகிய கூட்டணி ஆட்சி அமைய ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாக பல்வேறு வதந்திகள் பரவின. இதுகுறித்து ரஜினியை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் முடிவுகள் வந்ததும் என்னை குறித்து சில விமர்சனங்கள் வந்தன.
ரஜினி விளக்கம்
அந்த விமர்சனங்களை பார்த்துவிட்டு நான் பதில் தராமல் இருந்தால் அது 100 சதவீதம் உண்மையாகிவிடும். தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் ஸ்டாலினை போய் சந்தித்தேன். கொள்கை, அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்களது நட்பு 40 ஆண்டுகளுக்கு மேலானது.
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்தான். நட்பு ரீதியில்தான் ஸ்டாலினை நான் சந்தித்தேன். ஆனால் விஜய் முதல்வராவதை தடுக்க, நான் இரு பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது போல் ஒரு தகவல் பரவுகிறது. இப்படி பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தரங்கெட்ட ஆளு இந்த ரஜினி கிடையாது.
என்ன பொறாமை
விஜய் முதல்வராவதில் எனக்கு என்ன பொறாமை. நான் அரசியலிலும் இல்லை. அவருக்கும் எனக்கு 28 வயது வித்தியாசம், அவர் ஜெயித்ததுமே நான் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வராகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா என தெரியவில்லை.
விஜய் சாதனை
காரணம் அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் படம் போய்விடுமோ என்றுதான் நான் நினைத்திருப்பேன். விஜய் தனியாக போட்டியிட்டு வென்றுள்ளார். எம்ஜிஆர், என்டிஆரை விட அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார். இது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வென்றிருப்பேன். மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பிய சமயத்தில் விஜய் வந்துள்ளார்.
நான் ஏன் வரவில்லை என 3 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிட்டிருந்தேன். விஜய்யை கமல்ஹாசன் சந்தித்துவிட்டார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் பார்த்துவிட்டார்கள். அவரை சம்பிரதாயத்திற்கு சந்திக்க எனக்கு விருப்பமில்லை.
கருணாநிதியை சந்தித்தது ஏன்
1996 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வரான போது நான் ஊரில் இல்லை, 15 நாட்கள் கழித்து சென்னை வந்ததும், எனக்கு கருணாநிதி போன் செய்து உங்களை பார்க்க நான் வரட்டுமா, இல்லை நீங்கள் வருகிறீர்களா என கேட்டார். அதற்கு நான், அய்யோ நானே வரேன் என சொல்லிவிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினேன். அது போல் ஜெயலலிதா முதல்வரான போது அந்த பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்க அவர் விரும்பியதால் நான் கலந்து கொண்டேன்.
விமான நிலையத்தில்
நான் அரசியலிலேயே இல்லாத போது விஜய் மீது எனக்கேன் பொறாமை. விமான நிலையத்தில் ஸ்டாலின் சந்திப்பு குறித்து விளக்கமளிக்க யாரேனும் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்களா என கேட்டேன். யாருமில்லை என்றார்கள். அப்போது யாரோ ஒருவர் கையில் கேமராவை வைத்துக் கொண்டு விஜய் முதல்வரானது குறித்து கேட்டார். அவரை பார்த்தால் பத்திரிகையாளர் போல் இல்லை, அதனால் நான் எந்த பதிலையும் சொல்லாமல் சென்றேன், உடனே விஜய்க்கு வாழ்த்து சொல்லலை என்கிறார்கள்.
விஜய்யை பாதிக்கக் கூடாது
தவெக தொண்டர்கள் இனிதான் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். ஒரு சிறு தவறு செய்தாலும் அது விஜய்யைதான் பாதிக்கும். மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு ரஜினி பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசைக்கு வந்தது. தமிழக அரசியலில் முதல்முறையாக அதிமுகவும், திமுகவும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.
நடந்தது என்ன
இந்த தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக துணையுடன் விஜய் முதல்வராகியிருக்கிறார். ஆனால் மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைப்பதற்கு முன்பு திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதற்காக ரஜினி, ஸ்டாலினிடம் பேசியதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் ரஜினி மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications