ரஜினிகாந்த் தேசியக் கட்சிகளில் இணைய மாட்டார்... அப்படினா திருநாவுக்கரசர் எந்தக் கட்சி?
நடிகர் ரஜினிகாந்த் தேசியக் கட்சிகளில் இணைய மாட்டார் என்றும் அவர் தனியாக அரசியல் கட்சித் தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனியாக அரசியல் கட்சி தொடங்கத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளதே தவிர, தேசிய கட்சிகளில் அவர் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சாத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அங்குள்ள ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார் திருநாவுக்கரசர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், " ரஜினி எனது 35 ஆண்டுகால நண்பர். அவர் தேசிய கட்சியில் எதிலும் சேர வாய்ப்புகள் இல்லை. ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியதில் அப்படிதான் சமிக்கைகள் தெரிந்தது. அது எப்போது என்பதை அவர்தான் அவர்பாணியில் சொல்லவேண்டும்.
இது ஜனநாயாக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் கட்சி தொடங்கலாம். அதனால் அவர் வரட்டும். அதன்பிறகு அதுபற்றி பேசலாம் " என்று கூறியுள்ளார். இதுதான் காங்கிரசில் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ரஜினி- நக்மா சந்திப்பு!
கடந்த 7ம் தேதி நடிகர் ரஜினியை, நடிகையும் காங்கிரஸ் கட்சி மகளிர் அணியின் பொதுச்செயலாளமான நக்மா அவரின் வீட்டில் சந்தித்தார். அது பற்றி நடிகை நக்மா அளித்த பேட்டிகளில் 'ரஜினி எனது நண்பர். அரசியல் சந்திப்பு இல்லை' என்று தெரிவித்திருந்தார்.
ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு
நடிகை நக்மா சந்திப்புக்குப் பிறகு ரஜினி தனது ரசிகர்களை நேரில் 4 நாட்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் சிஸ்டம் கெட்டுப்போயுள்ளது. அரசியல் என்ற போர் வரும்வரை காத்திருப்போம். போர் வந்தால் சேர்வோம்' என்று பேசினார்.
ரஜினியை ஒதுக்கும் காங்கிரஸ்
ரஜினியின் அரசியல் நகர்வுகளை டெல்லி காங்கிரஸ் தலைமை கவனித்த பிறகே முந்திக்கொண்டு நடிகை நக்மாவை நேரில் அனுப்பி வைத்து பேச வைத்தது. ஆனால் இன்று திருநாவுக்கரசர் ரஜினி தேசிய கட்சிகளில் சேரமாட்டார். தனி கட்சிதான் தொடங்குவார் என்று கூறியுள்ளார்.
ரஜினியை கண்டு பயப்படும் திருநாவுக்கரசர்
ரஜினி ஒருவேளை காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் தனது தலைவர் பதவி பறிபோய்விடுமோ என்று திருநாவுக்கரசர் பயப்படுகிறார் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள் வட்டாரத்தில். அதனால் ரஜினியை தனிக் கட்சி பாதைக்குத் தள்ளுகிறார்.
திருநாவுக்கரசர் மாவட்ட கட்சியிலா இருக்கிறார்?
ரஜினியை பற்றி சொல்வது போல திருநாவுக்கரசர் தான் தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சியையே கேவலப்படுத்திவிட்டார் என்று கொந்தளிக்கிறார்கள் கதர்சட்டை சொந்தங்கள். ரஜினியை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலா மோசமான சூழலிலா தமிழக காங்கிரஸ் இருக்கிறது?. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியை திருநாவுக்கரசர் கொண்டு சென்றுள்ளார் என்றும் கதர் சொந்தங்கள் அங்கலாய்க்கின்றனர்.