ரஜினியின் மெர்சல் பாராட்டு ஓகே.. ஆனால் மிரட்டிய பாஜக குறித்து ஒன்னும் சொல்லலியே!
மெர்சல் திரைப்படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த் அப்படத்துக்கான பாஜகவின் எதிர்ப்பு குறித்து மவுனமாகவே இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
Recommended Video
சென்னை: மெர்சல் திரைப்படம் குறித்து ட்விட்டரில் ஒற்றை வரியில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த் அப்படத்துக்கான பாஜகவின் மிகக் கடுமையான எதிர்ப்பு குறித்து எதுவும் கூறாமல் இருப்பதும் இப்போது பேசுபொருளாகிவிட்டது.
மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளதால் பாஜகவினர் கடுமையாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக விஜய் கிறிஸ்தவர் என்பதாலேயே இப்படியெல்லாம் பேசுகிறார் எனவும் விமர்சித்து வருகிறார் பாஜக்வின் எச். ராஜா. அதேநேரத்தில் நடிகர் விஜய்க்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் கேள்வி
இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தன. ரஜினி கருத்து கூறாமல் இருந்ததும் விவாதப் பொருளாக உருமாறத் தொடங்கியது.
பதிவிட்ட ரஜினி
இந்நிலையில் நேற்று மெர்சல் திரைப்படத்தை இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யுடன் நடிகர் கமல்ஹாசன் பார்த்து பாராட்டினார். அதேநேரத்தில் திடீரென ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், மெர்சல் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்; அத்துடன் மிக முக்கியமான பிரச்சனையை அலசியுள்ளதாகவும் கூறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த்.
|
முக்கிய பிரச்சனைகள்
அதேநேரத்தில் பாஜகவின் எதிர்ப்பு தொடர்பாக ரஜினிகாந்த் எந்த ஒரு கருத்தும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. முக்கியமான பிரச்சனையை அலசியுள்ளதாக பாராட்டியதே பாஜகவுக்கு எதிர்ப்பு என வைத்துக் கொள்ளலாம் என ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர்.
மவுனமாக இருப்பது ஏன்?
ஆனால், மெர்சலுக்கு மறுசென்சார் கூடாது என கமல் வெளிப்படையாக கூறியதைப் போல ரஜினிகாந்த் ஏன் பேசவில்லை என்பதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. தம்முடைய திரைப்படத்துக்கும் சிக்கல் வரக் கூடும் என்பதால்தான் ரஜினி பட்டும்படாமல் கருத்து தெரிவித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.