ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்: இல.கணேசன்
ஈரோடு: ரஜினிகாந்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, அவர் வரவும் மாட்டார் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வருவதில் பாஜக முனைப்பாக உள்ளது. ரஜினி லிங்கா படத்தின் வேலைகள் முடிந்த பிறகு அரசியல் பிரவேசம் குறித்து தெரிவிப்பார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கூறுகையில்,
மோடி
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு பல்வேறு சாதனைகள் செய்துள்ளார். பிற பிரதமர்களில் இருந்து அவர் 2 விஷயங்களில் வேறுபட்டுள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை உயரத்தியுள்ளார். அலுவலகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்ளாமல் பொது மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பிரதமராக மோடி உள்ளார்.
பிரபல நடிகர்
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த பிரபல நடிகர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. நீதிபதி என்பவர் குற்றவாளி யார் என்பதை பார்க்காமல் குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கினார்.
ஜெயலலிதா
ஜெயலலிதா மீதான வழக்கு 18 ஆண்டுகள் நடந்தன. இந்த காலகட்டத்தில் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவர் முயன்றார். நீதிபதி குற்றத்தின் அடிப்படையில் தான் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளார். தீர்ப்பு சரி இல்லை என்று நினைத்தால் அதை தெரிவிக்க வேண்டிய இடம் நீதிமன்றம். கூடுதல் ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
லஞ்சம்
அதிமுகவுக்கு பரிகாரம் வேண்டுமெனில் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் விற்பனையில் நடந்து வரும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். இவ்வாறு எல்லாம் செய்தால் தான் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
கோவில் கோபுரம்
காளையார் கோவில் கோபுரம் தீப்பிடித்ததற்கு முதல்வர் பன்னீர் செல்வம் வருத்தம் தெரிவிப்பதுடன் திருப்பணி செலவை அரசே ஏற்க வேண்டும்.
ரஜினி
ரஜினிகாந்த் என் நண்பர். ஆத்மார்த்தமான தேசிய எண்ணம் கொண்ட மனிதர். பாஜக தலைவர்கள் வாஜ்பாய் மற்றும் அதிவானியுடன் நல்ல நட்புடன் இருந்தார்.
அரசியல்
வெறும் யூகத்தால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வருகின்றன. அரசியல் கேள்விகளால் அவரை தர்மசங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம். அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றார் கணேசன்.