6 மாதம் பரோல் கேட்டு நளினி ஹைகோர்ட்டில் மனு- மகள் திருமணத்திற்கு லண்டன் செல்வதாக தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மகளின் திருமண ஏற்பாட்டிற்காக லண்டன் செல்ல பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி 6 மாத பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் அதன் மீதான பரிசீலனையை அரசு செய்து வருகிறது.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று நளினி உயர்நீதிமன்றத்திற்கும், மகளிர் ஆணையத்திடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தன்னுடைய மகள் திருமண வயதிற்கு வந்துவிட்டதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நளினி கோரியிருந்தார். ஆனால் நளினியின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் செய்ய லண்டன் செல்ல வேண்டி இருப்பதால் 6 மாதம் பரோல் கேட்டு நளினி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நளினியின் கணவர் முருகன் ஜீவசமாதிக்கு அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications