சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்... கமலின் ‘கடவுள்’ பேச்சுக்கு ராம கோபாலன் கண்டனம்
சென்னை: கடவுள் குறித்த நடிகர் கமலின் பேச்சுக்கு இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் நேற்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட கமல், சகிப்புத்தன்மை குறித்த விமர்சனம், மாட்டுக்கறி விவகாரம், கடவுள் நம்பிக்கை, அரசியல் பிரவேசம் என பலவற்றைக் குறித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில், கமலின் கடவுள் நம்பிக்கை குறித்த பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேடிக்கைத்தனமானது...
திரைப்பட கலைஞர் கமலஹாசனின் திறமையை பாராட்டுகிறோம், நேற்று அவருடைய பிறந்த நாளைக்கு நம்முடைய வாழ்த்தைத் தெரிவிக்கிறோம். நேற்று அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் பேசிய இருப்பது குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லாதது என்பதை அறியாதவர், தன்னை பகுத்தறிவுவாதி என்று கூறியிருப்பது வேடிக்கையானது.
கலையே தெய்வீகமானது...
தன்னை பாராட்டி அளித்த இறை வடிவ சிலையால் எந்த பயனும் இல்லை, அதனை உருக்கி பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார். ஒரு கலைஞருக்கு, அந்த சிலாரூபத்தில் உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்தால் எப்படி?! எந்தவொரு கலையைப் போற்ற வேண்டும், கலையே தெய்வீகமானது இல்லையா?
தசாவதாரம்...
இறைவன் பற்றிய அவரது கருத்தில் எத்தனை குழப்பம் ஏன்? உலகில் எத்தனை வேறுபாடு ஏன் என இறைவனைக் கேட்பேன் எனும் கமலஹாசன், தான் எப்படியிருக்கிறாரோ அப்படியே எல்லா படங்களிலும் நடித்தால்.. எப்படியிருக்கும்.. அவருக்கே சலித்துவிடாதா? பார்ப்பவர்கள் நிலை? இவர் தசாவதாரம் எடுத்து, பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கலாம், ஆனால் உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையானது. ஐந்து விரலும் ஒன்றுபோல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. இவரது படத்தில் எல்லா பாத்திரங்களும் கதாநாயகர்களாகவே நடித்தால் எப்படியிருக்கும்?!
இறைவன் பொதுவானவன்...
கடவுளுக்கு எல்லா மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்துகொண்டது சிறுப்பிள்ளைத்தனமானது. அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை அறிந்துகொள்வதில்லையா? அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவானேன்?
தர்ம சங்கடத்தில் ரசிகர்கள்...
இப்படி அவர் பேசிய ஒவ்வொரு கருத்தும் அவருக்கே உடன்பாடாக இருக்காது என்பது அனைவருக்கும் புரியும். பிறந்த நாளில் இப்படி பேசி, தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் வாழ்த்து கூறும்போது, ஏன் இப்படி பேசி தனது ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வரவேற்பு...
விருதைத் திருப்பித் தரும் விஷயத்தில் தெளிவாக அவர் கருத்து கூறியிருப்பதை வரவேற்கிறோம். விருது அறிஞர்களால், கலைஞனின் திறமைக்கு தந்ததாக இருக்கும்போது அதனை திருப்பி அளிப்பது என்பது விருதிற்கு நம்மைத் தேர்ந்தெடுத்தவர்களை அவமதிப்பதாகும் என்று கமல்ஹாசன் கூறியிருப்பதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications