'வெயிட்டிங்' ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியதன் பின்னணி என்ன? ஸ்டாலின் 'சுளீர்'
30 லட்சம் ரூபாய் புதிய நோட்டுக்களை ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்ட பின்னர் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டதற்கு முக. ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ், தொழில் முனைவோர் கழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ். கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி அவருடைய வீட்டை வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர். அதில் 30 லட்சம் ரூபாய்க்கான புதிய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்ள அவருடைய அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பதவிப் பறிப்பு
இந்த சோதனையின் போது பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது, இதற்காக அவரிடம் இருந்த தலைமை செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் தான் இன்னும் தலைமைச் செயலாளர் தான் என்று செய்தியாளர்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மீண்டும் பதவி
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவர் தற்போது, தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், ராமமோகன ராவிற்கு மீண்டும் பதவி வழங்கியது ஏன் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருமானவரி சோனை ஏன்?
ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்த போது அவரது வீடு ஏன் வருமான வரித்துறையால் சோதனை செய்யப்பட்டது? அதைவிட தலைமைச் செயலகத்திற்குள்ளேயே வரிமானவரித்துறையினர் நுழைந்து சோதனை செய்து ஏன் என்றும் அவர் வினா தொடுத்துள்ளார்.

சேகர் ரெட்டியுடன் தொடர்பு
கட்டிக் கட்டியாக தங்கத்தையும் கட்டுக்கட்டாக பணத்தையும் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டிக்கும் ராம்மோகனராவிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதையும் விளக்க வேண்டும் என்றம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளை அறிக்கை
பதவி நீக்கம் செய்யப்பட்ட ராம மோகன ராவிற்கு மீண்டும் பணி வழங்க ஏற்பட்ட நெருக்கடியும் நிர்பந்தமும் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். இது பற்றி மத்திய, மாநில அரசுகள் விரைவாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications