அதிமுக ஆட்சியிலே போக்குவரத்து ஊழியர்களுக்கு துயரம் தான்... மலரும் நினைவுகளில் ராமதாஸ்
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதால் அவற்றை நிறைவேற்றி தேவையற்ற வேலைநிறுத்தத்தை அரசு தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் அமரும் சமயங்களில் எல்லாம் அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் இத்தகைய துயரங்களுக்கு ஆளாவது தொடர்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதலே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பேரூந்துகள் முழு அளவில் இயங்கவில்லை.
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய வேலைநிறுத்தத்தை நடத்தும் நிலைக்கு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை தள்ளியதே தமிழக அரசு தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்பது காலம்காலமாக உள்ள நடைமுறையாகும். 11ஆவது ஊதிய ஒப்பந்தம் 31.08.2013 அன்று முடிவடைந்து விட்ட நிலையில், 01.09.2013 முதல் 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதன்பின் 15 மாதங்களாகியும் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுத்து வருகிறது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதனால் பயனில்லை என்ற நிலையில் தான் நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 22ஆம் தேதி அறிவித்தன. இதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேசும்படி அரசை கடந்த 24 ஆம் தேதி வலியுறுத்தியிருந்தேன்.
பொதுமக்கள் பாதிப்பு:
அதைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் அரசுத் தரப்பில் 2 முறை பேச்சு நடத்தப்பட்ட போதிலும், அவை அர்த்தமுள்ளவையாக இல்லை. தங்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் இன்று காலை முதலே அதிகாரப்பூர்வமற்ற வகையில் வேலைநிறுத்தத்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால் அரசுப் பேரூந்துகள் முழு அளவில் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். நாளை முதல் போராட்டம் தீவிரமடையும் என்பதாலும், அரசு - தனியார் அலுவலகங்கள் திறக்கப்படும் என்பதாலும் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மாறாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவில்களில் மக்கள் முதல்வரைக் காப்பாற்ற வேண்டி யாகங்களையும், பூசைகளையும் நடத்தி தங்களின் ராஜவிசுவாசத்தைக் காட்டுவதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் துயரம்...
அ.தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும் துயரம் தொடங்கிவிடுகிறது. 1991 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களை வைத்து பேரூந்துகள் இயக்கப்பட்டதால் விபத்துக்களும், பழுதும் ஏற்பட்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றிருந்தால் எவ்வளவு செலவாகியிருக்குமோ, அதைவிட பல மடங்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டது.
அதேபோல் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இதே ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த போது தீபஒளித் திருநாளுக்கான ஊக்கத்தொகை 20 விழுக்காட்டில் இருந்து 8.33% ஆக குறைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, வேலைநிறுத்தத்தை முறியடிப்பதாக கூறி பள்ளி, கல்லூரிகளின் பேரூந்துகளும், தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டன. அனுபவமில்லாத ஓட்டுனர்களைக் கொண்டு அரசுப் பேரூந்துகள் இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட பேரூந்தும், வேனும் கோவில்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஏராளமான சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
தமிழக அரசின் பிடிவாதத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் மீண்டும் அதே போன்ற விபத்துக்கள் நடந்துவிடக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதாலும் அவற்றை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை அரசு தவிர்க்க வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications