''சிறு நரியுடன் கூட்டணி வைத்த சிங்கக்குட்டி''... தேமுதிக மீது பாய்ந்து படாரென பம்மிய பாமக!
சென்னை: சிங்கக்குட்டிகள் சிறு நரியிடம் பிச்சை கேட்காது என்று வீராவேசமாக முழங்கியிருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஆனால் இன்று வேறு வழியில்லாமல் தேமுதிகவிடம் பணிந்து போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் தொடர்பாக தேமுதிகவிடம் பணிந்து போக முடியாது என்பதைத்தான் தர்மபுரியில் நடந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகக் கூட்டத்தின்போது டாக்டர் ராமதாஸ் கோபமாக இப்படிப் பேசியிருந்தார்.

தர்மபுரி கூட்டத்தில் அவர் பேசுகையில், நீங்கள் சிங்கக் குட்டிகள். சிங்கக் குட்டிகள் சிறு நரியிடம் பணிந்து போகாது. அந்த நிலைக்கு ஆளாகாது என்று பேசியிருந்தார். இதன் மூலம் தேமுதிகவை அவர் சீண்டிப் பார்த்தார்.
பதிலுக்கு தேமுதிகவினரும் இப்படிப் பிராண்டியிருந்தனர். சிங்கம்னா சிங்கிளா நிக்க வேண்டியதுதானே, எதுக்கு கூட்டணிக்கு அலையனும் என்று அவர்களும் காட்டமாக பதிலடி கொடுத்திருந்தனர்.
இப்படியாக சூடான விவாதம் வெடித்திருந்த நிலையில்தான் இன்று ராஜ்நாத் சிங் முன்னிலையில் 'சிறு நரி' விஜயகாந்த்துடன், 'சிங்கக்குட்டி' அன்புமணி அருகருகே அமர்ந்து ஜோராக காணப்பட்ட காட்சியை தமிழகம் கண்டு ரசித்தது. அதை விட முக்கியமாக 'சிறு நரி' விஜயகாந்த்துக்கு 'சிங்கக்குட்டி' அன்புமணி பொன்னாடை வேறு போர்த்தி சிரிக்கச் சிரிக்கப் பேசி அசத்தியும் விட்டார். கூடவே பாமகவின் மற்ற சிங்கக்குட்டிகளான ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் புன்னகை தவழ நின்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications