Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசின் ஊழல்கள் குறித்து சுப்ரீம்கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை – ராமதாஸ் வலியுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் அனைத்துத்துறை ஊழல்கள் குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் ரோசய்யா ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கை:

தமிழக அரசின் ஊழல்கள் தொடர்பாக நாளொரு புகாரும் பொழுதொரு குற்றச்சாற்றும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தரமற்ற நுண்ணூட்டச் சத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படி வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டியதாக வேளாண்துறை இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ramadoss released a statement about Ministers

நேர்மையான வேளாண் அதிகாரி:

மதுரை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனராக பணியாற்றியவர் ஜெயசிங் ஞானதுரை. அப்பழுக்கற்ற நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்.

உயர்நீதிமன்றம் வரை..

அதன்காரணமாகவே கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணைக்குழுவில் இவரை சேர்க்க வேண்டுமென்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்றார்.

செல்போனில் பேச்சு:

வேளாண்துறை இணை இயக்குனர் பணியிலிருந்து நேற்று முந்தைய நாள் ஓய்வுபெற்ற இவர் வழியனுப்பு விழாவில் பேசும்போது, வேளாண்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த 26.01.2015 அன்று இரவு என்னை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அதிக விலைக்கு கட்டாயம்:

விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நுண்ணூட்டச் சத்துக்கள் தமிழக அரசின் வேளாண் துறையில் கிலோ ரூபாய் 60 என்ற விலையில் கிடைக்கிறது. ஆனால் இதே நுண்ணூட்டச்சத்து உரத்தை தனியாரிடமிருந்து கிலோ ரூபாய் 120 என்ற விலையில் வாங்கும்படி அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார்.

பணியிட மாறுதல் ஆணை

அதற்கான உத்தரவில் நான் கையெழுத்திடவில்லை என்றால் எனது பணியிட மாற்ற ஆணையில் கையெழுத்திடப்போவதாக மிரட்டினார். என்னை சென்னைக்கு இடமாற்றம் செய்வதற்கான ஆணையையும் அவர் படித்துக் காட்டினார்.

அமைச்சரின் உதவியாளர்

அதன்பின் பிப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சரின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பேச விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் நான் பேச மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ரூ175 கோடி இழப்பு:

தமிழக அரசின் வேளாண்துறைக்கு விதைகள் நுண்ணூட்டச் சத்துக்கள் உரங்கள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதில் ஆண்டுக்கு ரூபாய் 175 கோடி இழப்பு ஏற்படுவதாக கடந்த 27.03.2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாற்றியிருந்தேன். எனது குற்றச்சாற்றை நிரூபிக்கும் வகையில் ஜெயசிங் பேச்சு அமைந்திருக்கிறது.

தலைவிரித்தாடும் ஊழல்

வேளாண்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. விதை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைத் தயாரிப்பதற்கான வசதிகள் தமிழக அரசின் வேளாண்துறையில் உள்ளது.

செயற்கையான தட்டுப்பாடு:

ஆனால் அவற்றில் உற்பத்தியை குறைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதை வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

விதைகள் கொள்முதல்

விதைகளை கொள்முதல் செய்வதில் மட்டும் ஆண்டுக்கு ரூபாய் 110 கோடி அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது. ஜனவரி 26-ந் தேதி குடியரசு நாளாகும். அன்று அமைச்சர்களுக்கு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் இருக்கும்.

தொலைபேசி மூலம் ஊழல்:

ஆனால் அவற்றை விடுத்து இரவு நேரத்தில் அதிகாரிக்கு தொலைபேசியில் பேசி ஊழல் செய்யும்படி ஓர் அமைச்சர் மிரட்டுகிறார் என்றால் அவருக்கு இதுதான் முழுநேரப் பணியாக இருந்திருக்க வேண்டும்.

முத்துகுமாரசாமி தற்கொலை

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மிரட்டலால் தான் நெல்லையைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். ஜெயசிங் ஞானதுரை நேர்மையானவர் மட்டுமின்றி துணிச்சலானவராகவும் இருந்ததால் தான் அமைச்சரின் மிரட்டலை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

உத்தமமானவர்கள் அல்ல

இல்லாவிட்டால் முத்துக்குமாரசாமிக்கு ஏற்பட்ட கதி தான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். அமைச்சராக இருந்து இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும் தான் இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபட்டார். மற்ற அமைச்சர்கள் எல்லாம் உத்தமமானவர்கள் என்று கருதிவிடக் கூடாது. அனைத்துத் துறைகளிலும் இதே நிலை தான். பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மிரட்டலால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை தயாரித்தால் அது சிந்துபாத் கதை போல நீண்டு கொண்டே போகும்.

கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற நாடு

தமிழ்நாடு என்றால் கலைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற மாநிலம் என்ற பெருமை உலகம் முழுவதும் பரவியிருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாடு என்றால் ஊழல் மலிந்த மாநிலம் என்ற அவப்பெயர் தான் நிலவுகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் தமிழக அரசின் மீதான ஊழல் பட்டியலை கடந்த 17.02.2015 அன்று தமிழக ஆளுனரிடம் பா.ம.க. அளித்தது.

தமிழக அரசின் ஊழல்கள்

அதில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றைத் தவிர சில புதிய ஊழல்கள் இப்போது அம்பலமாகியிருப்பதால் தமிழக அரசின் அனைத்துத்துறை ஊழல்கள் குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த மேதகு தமிழக ஆளுனர் ரோசய்யா ஆணையிட வேண்டும்

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+