பெங்களூரை 365-வது பிரிவின் கீழ் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ்
சென்னை: கர்நாடக அரசு கலவரக்காரரக்ளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை அந்த அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே பெங்களூரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மத்திய அரசு தன் பொறுப்பில் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி பெங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் ராமதாஸ் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேலும் 5 நாட்கள் தண்ணீர்
தமிழ்நாட்டிற்கு காவிரியில் மேலும் 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளுதைத் தொடர்ந்து பெங்களூருவில் கன்னட இன வெறியர்கள் நடத்திய வன்முறை தாக்குதலில் 50க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. சுமார் 20 சரக்குந்துகளும் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னட இன வெறியர்களின் இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக உரிமையை மதிக்க வேண்டும்
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை கர்நாடக அரசு மதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நாளிலிருந்தே தமிழர்களுக்கு எதிரான வன்முறை கர்நாடகத்தில் அதிகரித்து வருகிறது. முழு அடைப்பு என்ற பெயரில் தமிழநாட்டு வாகனங்களைக் கன்னட வெறியர்கள் தாக்கினார்கள். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக சந்தோஷ் என்ற தமிழ் இளைஞரை கன்னட வெறியர்கள் கொடூரமாகத் தாக்கினார்கள்.

வேடிக்கை பார்த்த கர்நாடக அரசு
இந்த வன்முறை செயல்களைக் கர்நாடக அரசு கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. இதனால் ஊக்கமும் துணிச்சலும் பெற்ற கன்னட இன வெறியர்கள் அடுத்தக் கட்டமாக தமிழ்நாட்டுப் பேருந்துகளையும் சரக்குந்துகளையும் எரித்து தங்களின் தமிழர் எதிரப்பு வெறியை வெளிப்படுத்தியுள்ளனர். இது நாகரீக சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத செயலாகும்.

நீதிபதிகள் கண்டித்தும் கூட அடங்கவில்லை
கர்நாடகத்தில் தமிழகத்திற்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று கடுமையாக கண்டித்திருந்தது. அதற்கு பிறகும் கர்நாடகத்தில் தமிழகத்திற்கு எதிரான வன்முறைகள் நடத்தப்படுகின்றன என்றால் அவை அம்மாநில அரசின் ஆதரவு இல்லாமல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தக் கலவரங்களுக்கு கர்நாடக அரசுதான் பொறுப்பேற்க்க வேண்டும்.

1991 கலவரம் போல கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
1991-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றத்தின் இடைக்காலத் தீரப்பு வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கிட்டத்தட்ட அதேபோன்ற சூழல்தான் இப்போதும் நிலவுகிறது. கலவரக்காரர்களுக்கு ஆதராவக செயல்படும் கர்நாடக அரசு அங்குவாழும் தமிழர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

365வது பிரிவைப் பயன்படுத்தி
எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி பெங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இராணுவத்தையும் துணை இராணுவ படைகளையும் அனுப்பி அப்பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கும் தமிழர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications