மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் வாட்ஸ்ஆப்பில் தன்னைத் தானே புகழ்கிறார் ஜெ.. ராமதாஸ் தாக்கு
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதை விட்டு விட்டு தன்னைத் தானே புகழ்ந்து வாட்ஸ் ஆப்பில் உரையாற்றிய ஜெயலலிதாவின் செயல் முகம் சுளிக்க வைக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியை விரைவில் அகற்ற வேண்டும் என்பதன் அவசியத்தை அவரது வாட்ஸ் ஆப் உரை உணர்த்துவதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற உள்ள பாமக மாநாட்டிற்கு வருமாறு பாமகவினருக்கு அழைப்பு விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். ராமதாஸின் அறிக்கை:

தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்
தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன் மாற்று அரசியல் என்ற வேள்வியை பாட்டாளி மக்கள் கட்சித் தொடங்கியிருக்கிறது. இதற்கான முடிவு 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் மறு உறுதி செய்யப்பட்டது.

முதல்வர் வேட்பாளர் அன்புமணி
அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த செய்திகள் அனைத்தும் நீங்கள் நன்றாக அறிந்ததே!

அண்மைக்கால நிகழ்வுகள்
எந்தெந்த காரணங்களுக்காக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுகவும், திமுகவும் அகற்றப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறதோ, அந்தக் காரணங்களை வலுப்படுத்தும் வகையில் தான் அண்மைக்கால நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தில் மூழ்கடித்த திமுக - அதிமுக
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை சோகத்திலும், சேதத்திலும் ஆழ்த்திய மழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் இரு கட்சியினராலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

முகம் சுளிக்க வைக்கும் ஜெ.
இது இப்படி என்றால் வெள்ள நிவாரணப் பணிகளின் போது அ.தி.மு.கவினர் அரங்கேற்றிய அக்கிரமங்களும், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டிய முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் உரையில் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டதும் முகம் சுளிக்க வைக்கும் நடத்தைகள் ஆகும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மிகவும் விரைவாக நிகழ்த்தப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன.

ஆட்சி மாற்றம் அவசியம்
ஆட்சி மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தை நாம் விரைவுபடுத்த வேண்டிய நேரத்தில், அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் எட்டாவது மண்டல மாநாடு வரும் 03.01.2016 மாலை 4.00 மணிக்கு விழுப்புரம் பூத்தமேடு பகுதியில் நடைபெறவுள்ளது. எனது முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிர்வாகிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழையும் மிஞ்ச வேண்டும்
இதுவரை நடந்த 7 மாநாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவற்றை விஞ்சும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications