அன்வர் ராஜா வீடா இது? கட்சிக்காரர்கள் வந்து எத்தனை நாளாச்சு! இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
ராமநாதபுரம்: அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சாரை சாரையாக நேரில் சென்று வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதனால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீடு மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரர்கள் யாரும் அன்வர் ராஜா வீட்டை எட்டிக்கூட பார்க்காத நிலையில் இப்போது மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்துள்ளார் அன்வர் ராஜா.

கட்சிக்காரர்கள் வாழ்த்துச் சொல்வதற்காக தொடர்ந்து வருவதும் போவதுமாக இருப்பதால் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டில் இருந்தவாறு அவர்களை சந்திப்பதில் அலாதி மகிழ்ச்சி கொள்கிறார் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி தொடங்கி அம்மாவட்டத்தின் நகர, பேரூர், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் வரை அன்வர் ராஜாவை அவரது வீடு தேடிச்சென்று வாழ்த்தியுள்ளனர்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதை போல் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வீட்டில் கட்சிக்காரர்களை திரளாக அமர வைத்து நடுநாயகமாக இருக்கை போட்டு அமர்ந்து அவர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார் அன்வர் ராஜா.
1986-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் பேச வாய்ப்பளிக்கப்பட்ட 4 நபர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த மாநாடு முடிந்த ஒரே வாரத்தில், அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக அன்வர் ராஜாவை நியமித்து எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி கொடுத்ததும் கடந்த கால வரலாறு.

இப்படி அதிமுகவின் ஆரம்பக் கால சீனியரான இவர் இந்நேரம் கட்சியில் இருந்திருக்க வேண்டிய இடமே வேறு. ஆனால் இப்போது தான் இவருக்கு அமைப்புச் செயலாளர் பதவியே தரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த காலத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் தான்.
இதனிடையே உட்கட்சி விவகாரத்தில் கருத்து ஏதும் சொல்லாமல் சற்று பொறுமை காத்திருந்தால் தமிழ் மகன் உசேன் வசிக்கும் அதிமுக அவைத்தலைவர் பதவியிலேயே அமர்ந்திருக்கலாம் என்ற நினைப்பும் அவ்வப்போது அன்வர் ராஜாவை எட்டிப்பார்ப்பதாக தெரிவிக்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications