கடலோர மாவட்டங்களில் கனமழை... ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை
ராமேஸ்வரம்: தென் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இம்மாத இறுதியில் முடிவடைகிறது. வழக்கத்தை விட இந்தாண்டு சற்றுக் கூடுதலாகவே மழை பெய்து வருகிறது.
இம்மாதம் 1ம் மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நாகை பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இரண்டாவது நாளாக மீன் பிடிக்கச் செல்லாததால், வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதால், தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகளில், இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications