ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக் - பிப். 29-ல் இலங்கை தூதரகம் முற்றுகை!
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் வலியுறுத்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் 27 மீனவர்களையும், 79 படகுகளை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் மீனவர்கள்.
இதனையடுத்து, இந்திய, இலங்கை மீனவர்களின் பிரச்னை குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்குகினர்.
இதையடுத்து வருகிற 29 ஆம் தேதி சென்னையிலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து அதற்கான ஆயத்தப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.