மீண்டும் போலீஸ் காவலில் எடுக்கப்படுகிறார் ராம்குமார்?
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை மீண்டும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் சாப்ட்வேர் என்ஜீனியர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ராம்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்தான் கொலையாளி என்பது போலீஸ் தரப்பு முடிவாகும். ஆனால் இதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. எனவே உண்மையான குற்றவாளி யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில் ராம்குமாரை சமீபத்தில் 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து ராம்குமார் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது சிறைக் காவல் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் அவரை நாளை போலீஸார் எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். அப்போது மீண்டும் ராம்குமாரை காவலில் அனுமதிக்கக் கோரி போலீஸ் தரப்பில் மனு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்த முறை அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், அவர் தங்கியிருந்த சூளைமேடு மேன்ஷனுக்கும் அழைத்துக் கொண்டு போய் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
விசாரணைகளை விரைவில் முடித்த பிந்னர் அடுத்த 15 நாட்களுக்குள் ராம்குமார் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் போலீஸார் மும்முரமாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications