இந்தியாவிலேயே கரண்ட் கம்பியை "கடிச்சு" செத்த முதல் கைதி.. ராம்குமார்தான்!
சென்னை: இந்தியாவிலேயே எந்த சிறையிலும் இல்லாத புதுமையாக சென்னை புழல் சிறையில் ராம்குமாரின் மரணம் நடந்தேறியுள்ளது. கரண்ட் கம்பியை கடித்து இதுவரை எந்தக் கைதியும், எந்த சிறையிலும் இறந்ததில்லை. ஆனால் ராம்குமார் "மூலமாக" அந்த சாதனையைப் படைத்து விட்டனர் புழல் சிறை அதிகாரிகள்!
ராம்குமாரின் மரணத்திற்கு சிறை அதிகாரிகள் கூறியுள்ள காரணம் மிக மிக விசித்திரமாக இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா என்றே பலரும் சந்தேகமாக பேசி வருகிறார்கள். யாராலுமே இந்த மரணத்திற்கான காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போலீஸ் மற்றும் சிறை அதிகாரிகள் மட்டுமே இதை கூறி வருகின்றனர். மற்றவர்கள் இதை நம்பக் கூட மறுத்து வருகிறார்கள்.

இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை அறிந்ததாக தகவல் இல்லை. கூகுளில் தேடிப் பார்த்தாலும் கூட நமக்கு எந்தத் தகவலும் இல்லை. இந்தியச் சிறைகளில் இதுவரை இப்படி ஒரு வித்தியாசமான மரணம் சம்பவித்ததில்லை. காரணம், இந்திய சிறைகளில் இப்படி கைதிகள், நிறுத்தி நிதானமாக கரண்ட கம்பியை தேடிப் பிடித்து வாயில் வைத்துக் கடித்து சுவைத்து செத்துப் போகும் அளவுக்கு கரண்ட் கம்பிகளோ, வயர்களோ வெளியில் தேமே என்று தொங்குவதாக தெரியவில்லை, அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால் ராம்குமார் கரண்ட் கம்பியைப் பிடித்து கடித்து விட்டார், வயரைக் கடித்து விட்டார் என்று கூறுகிறார்கள். அதை அவர் எப்படிக் கடித்தார் என்பதையும் சிறை வார்டன் பேச்சிமுத்து என்பவர் உணர்ச்சிகரமாக நேற்று செய்தியாளர்களிடம் விளக்கவும் செய்தார். ஊரையே கூட்டி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்றுதான் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
சிறையில் கைதிகள் தற்கொலை என்பது ஆச்சரியமான விஷயம் அல்லதான். ஆனால் மரத்தில் தூக்குப் போடுவது, சிறை அறைக்குள் தூக்குப் போடுவது என மிக சாதாரண முறைகளுக்குத்தான் அதிக வாய்ப்புண்டு. ஆனால் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புழல் சிறையில் கரண்ட் கம்பியையும், வயரையும் எப்படி எடுத்து வாயில் கடித்து செத்துப் போகும் அளவுக்கு சர்வ சாதாரணமாக விட்டு வைத்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
இந்தியாவில் இதுவரை நடந்திராத மரணம் இது. அந்த வகையில் ராம்குமாரின் நூதன மரணம் வரலாறு படைத்து விட்டது!












Click it and Unblock the Notifications