ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு… தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் கைவிரித்த நிலையில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கை தந்தை பரமசிவம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம்குமார் மர்மமான முறையில் இறந்தார். மின் கம்பியை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தாலும், இதனை நம்ப மறுத்த அவரது தந்தை பரமசிவம், பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதனை ஏற்க மறுத்த நிலையில், இரண்டு பேர் கொண்ட அமர்வில் விசாரிக்க மேல் முறையீடு செய்தார் பரமசிவம். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் தனியார் மருத்துவர் குறித்து கருத்து வேறுபாடு உருவானதால் 3வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, 3வது நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்து விட்டு எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும் 27ம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை நடத்தி விட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்த பரமசிவம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கொண்டு விசாரிக்க முடியாது என்றும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, ராம்குமாரின் தந்தை பரமசிவம் இன்று டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கை மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பின்னர்தான் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தனியார் மருத்துவர் ஒருவர் முன்னிலையில் நடக்குமா இல்லையா என்பது தெரிய வரும். மேலும் கடந்த 18ம் தேதியில் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் காத்திருக்கும் ராம்குமாரின் உடல் எப்போது முறைப்படி பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்பதும் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications