முதல்நாளே கைது செய்யப்பட்டார் ராம்குமார்... வக்கீல் ராமராஜ் பரபரப்புத் தகவல்
நெல்லை: சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர் ஒருநாள் முன்னதாகவே கைது செய்யப்பட்டு விட்டதாகவும் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் ராமராஜ்.
கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இன்போசிஸ் ஊழியரான சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை, ஓய்வு பெற்ற நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராமராஜ் நேற்று நேரில் சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் பல்வேறு உண்மைகளை ராம்குமார் கூறியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்துச் செய்தியாளர்களைச் சந்தித்த ராம்ராஜ், ‘ராம்குமார் நிரபராதி. போலீசார் தான் அவரது கழுத்தை அறுத்துள்ளனர். கூடிய விரைவில் மேலும் உண்மைகள் வெளிவரும்' என பரபரப்புப் பேட்டியளித்தார்.
அதனைத் தொடர்ந்து மீனாட்சிபுரம் சென்று ராம்குமாரின் பெற்றோரைச் சந்தித்தார் ராம்ராஜ். அவர்களிடம் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசினார் அவர்.
அப்போது, "ராம்குமாரின் காயம் ஆறாத நிலையில் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரால் பேசமுடியவில்லை. மன அழுத்தத்தில் இருக்கிறார்" என்றார்.
இந்த வழக்குத் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் தங்களை அணுகியதாகவும், அதன் அடிப்படையிலேயே அவரை புழல் சிறையில் சந்தித்ததாகவும் ராமராஜ் தெரிவித்துள்ளார். அதோடு, முற்போக்கு வழக்கறிஞர்கள் ஆலோசனைப்படி இந்த வழக்கை நடத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "ராம்குமாரின் காயம் ஆழமானது. அதை விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் அது அவரால் எற்படுத்தப்பட்டதா? அல்லது வேறு யாராவது ஏற்படுத்தியதா என்கிற உண்மை தெரியவரும். மேலும், இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். ராம்குமாருக்கும் இந்த கொலைக்கும் சமபந்தமே இல்லை; அதை எங்களால் நிரூபிக்க முடியும்'' என்றார்.
மேலும் இது தொடர்பாக அளித்துள்ள மற்றொரு பேட்டியில், "சுவாதி படுகொலை வழக்கில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொரு விஷயங்களாக வெளிவருகிறது. அவரை போலீஸார் அதிகாலையில் கைது செய்யவில்லை. முதல்நாளே கைது செய்துவிட்டனர். வெளியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு அவருடைய கழுத்தை அரை வட்ட வடிவில் அறுத்துள்ளனர். தாடைப் பகுதியில் அறுத்தால், சரியாக பேச முடியாது என்பதால் அவ்வாறு செய்துள்ளனர். பிறகு, ரத்தம் வடிய மயங்கிய நிலையில் ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர்" என பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார் ராமராஜ்.












Click it and Unblock the Notifications