விசாரணைக்கு ஒத்துழைக்காத ராம்மோகன் ராவ் மகன் விவேக்.. மனைவிக்கு உடல் நலமில்லை என்று நாடகம்!
வருமானவரித் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் ராம்மோகன் ராவின் மகன் விவேக் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவின் மகன் விவேக், தனது மனைவிக்கு உடல் நலமில்லை என்று கூறி வருமானவரித் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மறுத்து வருகிறார். இது ஒரு நாடகம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது மகனின் வீடுகள் வருமானவரித் துறையினரால் சோதனை செய்யப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரிக்க வருமானவரித் துறையினர் விவேக்கிற்கு சம்மன் அனுப்பினார்கள். முதல் நாள் விசாரணைக்குச் சென்ற விவேக் அடுத்தடுத்து செல்லாமல் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு வருவதாக நேற்று கூறிய விவேக் இன்றும் விசாரணைக்கு செல்லவில்லை. விவேக்குக்கும், அவரது மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாததால் வருமான வரித்துறையினர் முன் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையை தள்ளிப் போடுவதற்காக விவேக் நாடகமாடுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, விசாரணைக்கு ஒத்துழைக்காத விவேக் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications